Friday 23 February 2018

கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்

ஒரு ஆப்பிள் கேக்கை ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டுமென்றால், நீங்கள் முதலில் ஒரு பேரண்டத்தைக் கட்டவேண்டும்.
‘காஸ்மோஸ் ‘
கெப்ளர் தான் வெகுகாலம் உண்மையென்று நம்பி, இருதயத்தில் இருத்தி வைத்திருந்த நம்பிக்கை, அவர் செய்த துல்லியமான பரிசோதனை முடிவுகளுக்கு மாறாக இருந்த போது, அவர் உண்மையைத்தான் சங்கடத்துடன் ஒப்புக்கொண்டார். மனதுக்கு அருகில் இருந்த பிரமைகளை விட கடினமான உண்மைகளையே அவர் விரும்பினார். அதுதான் அறிவியலின் இதயம்.
-காஸ்மோஸ்
பெளதீகத்தில் (physics) மிகவும் அழகான, சிறப்புவாய்ந்த எத்தனையோ கோட்பாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் பரிசோதனைகளுக்கு எதிராக அவைகளால் நிற்க முடியவில்லை. என்னுடைய பார்வையில், பரிசோதனைகளுக்கு எதிராக நின்று தாக்குப் பிடிக்க முடியாத கோட்பாடுகளை தூக்கி எறியும் மனித குணம், நமது சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் மத விஷயங்களில் கடை பிடிக்கப்பட்டால், நமது மனித வாழ்க்கை மிகவும் முன்னேறிவிடும் என்று நம்புகிறேன்.
– ‘ஏடனின் டிராகன்கள் ‘ என்ற புத்தகத்தில்.
அறிந்து கொள்ள ஆர்வமும், பிரச்னைகளைத் தீர்க்கும் ஆர்வமும் மனித இனத்தின் உணர்ச்சிகரமான அடையாளங்கள். மனித முயற்சிகளில் மனிதத்துவம் மிகுந்தவை கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், இசை மற்றும் கலைகள். இந்த வரிசை ‘கலைப்படிப்பு ‘ (humanities) என்று சொல்லும் பாடங்களை விட அதிகமானவைதான். உண்மையிலேயே, இந்த பொதுவாக குறிப்பிடப்படும் கலைப்படிப்புகள் குறுகியவை. கணிதம் கவிதையைப் போலவே மிகுந்த மனிதத்துவம் மிகுந்தது.
‘ஏடனின் டிராகன்கள் ‘ புத்தகத்திலிருந்து.
‘ பயத்தின் காரணமாகவும், அதிகாரத்தின் மீது கொண்ட ஆசையாலும் அளவிட முடியாத, உண்மையிலேயே நம் எல்லோருக்கும் பொதுவான அறிவை அழித்த ஏராளமான மனிதர்கள் நம் வரலாற்றில் நிரம்பிக் கிடக்கிறார்கள். இது இன்னொரு முறை நடக்க அனுமதிக்கக்கூடாது ‘
– காஸ்மோஸ்
நமது விசுவாசம் நம் இனத்துக்கும், நம் கிரகத்துக்கும் மட்டுமே. நாம் இந்த பூமிக்காகப் பேசுகிறோம். நாம் வாழவேண்டிய கட்டாயம், நமக்காக மட்டுமல்லாமல், இந்த நாம் உதித்த பழைமையான பேரண்டத்திற்காகவும்தான்
– காஸ்மோஸ்
நாம் 4.5 பில்லியன் வருடங்களின் கடினமான, மெதுவான, உயிரியல் பரிணாமத்தின் விளைவு. இத்துடன் இந்த பரிணாமம் நின்று போய்விட்டது என்று நாம் நினைத்துக்கொள்ள எந்தக் காரணமும் இல்லை. மனிதன் ஒரு இடைப்பட்ட மிருகம். அவன் பரிணாமத்தின் உச்சம் அல்ல.
– காஸ்மிக் தொடர்பு
ஒரு பேரண்டத்தின் பார்வையில் பார்க்கும் போது, நாம்தான் கடைசி என்றோ, நாம் தான் மிகச்சிறந்த படைப்பு என்றோ நினைத்துக்கொள்ள எந்தக் காரணமும் இல்லை.
– காஸ்மிக் தொடர்பு
விண்வெளி வேதியியலின் சாம்பலே இன்று நமது மனமாக உருமாறி வந்திருக்கிறது. தொடர்ந்து வளரும் வேகத்தில், அது எழுத்தையும், நகரங்களையும், கலைகளையும், அறிவியலையும் கண்டுபிடித்திருக்கிறது. இதுவே இன்னும் மற்ற கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் விண்கலங்களை அனுப்புகிறது.. இதெல்லாம் ஹைட்ரஜன் அணுக்களுக்கு சில 15 பில்லியன் வருடங்கள் நேரம் கொடுத்தால் செய்யக்கூடிய விஷயங்கள்
– காஸ்மோஸ்
ஆதாரங்கள் இல்லாமை, இல்லாமையின் ஆதாரமல்ல
-ஏடனின் டிராகன்கள்
அசாதாரணமான விஷயங்களை நாம் நிச்சயமாக ஆராயவேண்டும். ஆனால், அசாதாரணமான விஷயங்கள் இருப்பதாகச் சொல்பவர்களுக்கு அசாதாரணமான ஆதாரங்களும் தேவை.
– பிரோக்காவின் மூளை
நவீனப் போர்களை நாம் இன்னொரு சமுதாய மக்களின் மீது அதிக அளவு விளைவுடன் நடத்துகிறோம். இந்த விளைவுகளின் மோசத்தை நாம் கணக்கிலெடுத்துக்கொள்ளக்கூட பயப்படுகிறோம். இப்படிப்பட்ட பெரும் படுகொலைகள் பெரும்பாலும், இன, தேசீய மறு விளக்கங்களாலும், எதிராளிகள் மனிதர்கள் அல்ல விலங்குகள் என்றும் நியாயப்படுத்தப்படுகின்றன.
– ஏடனின் டிராகன்கள்

நன்றி திண்ணை இணையதளம்

Wednesday 21 February 2018

பிளாக் பேந்தர் விமர்சனம்



ஒரு flash back க்குடன் படம் துவங்குகிறது, விண்ணில் இருந்து விழுந்த விண்கல் மூலம் வகான்டா நாட்டுக்கு vibranium தனிமம் கிடைக்கிறது, அதை வைத்து அந்த நாடு மிகப் பெரிய முன்னேற்றம் அடைகிறது, King டச்சாக்கா அந்நாட்டை ஆட்சி செய்யும் போது அவரது சகோதரர் செய்யும் துரோகத்தினால் எதிர்பாராத வகையில் டச்சாக்காவால் கொல்லப்படுகிறார், அவரது மகன்தான் killmonger
அதிலிருந்து தற்போதய காலத்தில் படம் துவங்கிறது
Captain America civil war படத்தில் காட்டியபடி டச்சாக்கா இறந்த சில நாட்களுக்கு பிறகு அவரது மகன் டச்சலா அரசுக்கு உரிமை கோருகிறார், ஆனால் வகான்டாவின் வழக்கப்படி அங்கு முதன்மை பெற்று இருக்கும் பல்வேறு இனங்களில் அரசனாக போட்டியிட விரும்பும் வீரர்களுடன் போட்டி சண்டையிட்டு வெல்ல வேண்டும், அதன்படி வென்று அரசராகிறார்
இடையே பிரபல vibranium கொள்ளைகாரர் klaue வை பிடிக்க கொரியா செல்கிறார், ஆனால் அங்கு வந்த killmonger, klaue வை பிடித்து வகான்டாவிடம் ஒப்படைத்து அரசனாக உரிமை கோருகிறார், அதுமட்டுமின்றி வகான்டாவின் வளங்களையும், தொழில்நுட்பங்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முற்படுகிறார், அதில் ஏற்படும் சண்டையில் அவர் வீழ்த்தபடுகிறாரா, வகான்டாவின் வளங்கள் காக்க படுகிறதா என்பது படத்தின் முடிவாக இருக்கிறது
நடிகர்கள்
படத்தில் chadwick baseman டச்சாலாவாகவும், Michael b Jordan, Erik killmonger ஆகவும், letitia Wright 😍😍😍டச்சலாவின் தங்கையாகவும், Danai guraira அரசனை பாதுகாக்கும் வீராங்கனையாகவும், Hobbit இனத்தை சேர்ந்த Martin Freeman, Andy serkis இருவரும் Ross மற்றும் klaue வாகவும், illegal entry புகழ் Dani, எல்லை காவலராகவும் தத்தமது பங்கேற்பை மிக சிறப்பாக செய்து இருக்கிறார்கள்
படத்தில் பலமே சண்டைகாட்சிகள்தான், Seoul ல் klaue வை பிடிக்க நடக்கும் சண்டை காட்சிகள் படத்தை பார்ப்பவர்களை இருக்கை நுனியில் கொண்டு வந்துவிட்டது, முப்பரிமாண காட்சியில் காணும் போது இங்கே பலர் குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர், இறுதி சண்டை மிக அட்டகாசம், அடுத்த வரும் Avenger வகான்டாவில் நடக்க இருப்பதால் இந்த சண்டையில் இருக்கும் காட்சியமைப்பின் தாக்கம் இல்லாமல் எடுப்பது மிக கடினமாகத்தான் இருக்க போகிறது, பல இடங்களில் சண்டை காட்சியை விட பின்னணி காட்சியமைப்பு மிக அருமை, குறிப்பாக அரசனுக்கான போட்டி நடக்கும் நீர் மைதானம் அட்டகாசம், Marvel ல் winter soldier படத்துக்கு பிறகு ஒரு முழு படமும் அற்புத இசையால் நிரம்பி வழிகிறது, இளம் அய்ரோப்பிய இசையமைப்பாளர் Ludwig goransson முத்திரை பதித்துள்ளார், சிறப்பான எதிர்காலம் உண்டு
எவ்வளவு தொழில்நுட்பங்களில் நிரம்பி இருந்தாலும் மக்கள் ஆப்பிரிக்க வரலாறுடன் இணைந்து நிற்பதாக காட்சி படுத்தியிருப்பது மிக அருமை, டைரக்டர் Ryan coogler அதை செதுக்கி வைத்து இருக்கிறார், மிகுந்த பாராட்டுக்குரியவர்
நெடுங்காலமாக அவர்கள் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்குவதாக கூறிவிட்டதால், இவ்வளவு technology க்கு பின் இருக்கும் வல்லுநர்களை பற்றி படத்தில் காட்டவில்லை, டச்சலாவின் தங்கை ஒருவர் மட்டுமே அந்த technology எல்லாவற்றுக்கும் பொருப்பாக காட்டப்படுவது சற்று நெருடலாக இருக்கிறது, இம்மாதிரியான சிறு குறைகளை தவிர்த்து இப்படம் மிக அருமையான படம்
Marvel ரசிகர்கள் மட்டும் இன்றி Action விரும்பிகள் அனைவரும் காண வேண்டிய படம், முக்கியமாக அற்புதமான DC character களை வைத்து மொக்கை படம் எடுக்கும் ஆட்கள் பார்க்க வேண்டிய படம், வாய்ப்பு உள்ளவர்கள் 3D ல் பாருங்கள், Marvel ல் எத்தனையோ படங்களை IMAX 3D ல் பார்த்து இருக்கிறேன், இந்த படத்தின் தொழில்நுட்ப தரத்தில் எந்த படமும் இருந்ததில்லை, really visual treat
படத்தில் ஒரு mid credit scene, மற்றும் post credit scene இருக்கிறது
Post credit scene ல் "winter is coming" ( spoiler )

Tuesday 19 March 2013

கார்ல் சாகன் கட்டுரைகள்

அபத்தம் அறியும் நுண்கலை - 2



                                                                 கார்ல் சாகன்

               

    அமெரிக்கப் புரட்சியாளர் TOM PAINE தனது AGE OF REASON என்ற நூலில் குறிப்பிட்டதைப்     போல நம்பிக்கையின்மை (நாத்திகம் - இறைமறுப்பு) ஒழுக்க ரீதியான முழுமையான விளைவுகளைக் கொண்டுள்ளது.

        இறை மறுப்பு என்பது நம்புவதிலோ நம்பாமல் இருப்பதிலோ இல்லை. தான் நம்பாத ஒரு விஷயத்தை நம்பச் சொல்லிப் பிரச்சாரம் செய்வதில் இருக்கிறது. இந்த ஒழுக்கக் கேட்டை அளவிடுவது சாத்தியமானதல்ல. நான் இதனை இப்படிச் சொல்வதானால்: மனப்பூர்வமாகப் பொய் சொல்வது என்பது     சமுதாயத்தில் இருக்கிறது. எங்கே மனிதன் கற்பைப் பறிகொடுத்து சோரம் போகிறானோ அதாவது தான்     நம்பாத விஷயங்களை தொழில் ரீதியான நம்பிக்கையாக வரித்துக்கொள்கிறானோ அங்கே ஒவ்வொரு     குற்றத்தையும் செய்வதற்குத் தன்னைத்தானே தயாரித்துக் கொண்டு விட்டான் என்று பொருள்படும்.

           
   T.V. HUXLEY  சொல்கிறார் :
    "ஒழுக்கத்தின் அடித்தளம் என்பது, சாட்சியம் இல்லாதவற்றை நம்புவதாக நடிப்பதை விட்டு விலகுவதும், அறிவின் சாத்தியத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் பற்றிய முன்மொழிதலை விட்டு விலகுவதும் ஆகும்"

    கிளமெண்ட், ஹ்யூம்  , பேய்ன் மற்றும் ஹக்சிலி ஆகிய அனைவரும் மதத்தைப் பற்றி பேசிக்     கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது எழுத்துக்களில் பெரும்பான்மை ஆன விஷயங்களுக்குப்     பொறுத்திப் பார்க்கும் பிரயோகங்களும் இருந்தன. உதாரணத்துக்கு நமது வணிக ரீதியான கலாச்சாரத்தின் பின்புலம் பற்றி ஓயாமல் விடாப்பிடியாக வற்புறுத்தி வந்ததைக் குறிப்பிடலாம்.

    ஆஸ்பிரின் என்ற வலி நிவாரணி பற்றி வகைவகையான விளம்பரங்கள் வருகின்றன. அதில் மருத்துவர் போல வேடம் பூண்ட நடிகர்கள் சந்தைபோட்டியிடும் தயாரிப்புகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வலிபோக்கி உட்பொருட்கள் இவ்வளவு அடங்கி இருக்கின்றன என்று சொல்வார்கள். ஆனால் அந்த அற்புதமான உட்பொருட்கள் (Ingredient)  (மருந்துக்கலவை) என்ன என்று உங்களி¢டம் சொல்வதில்லை. அவர்களது தயாரிப்பில் அதிக அளவில் அந்த உட்பொருட்கள் அடங்கி இருக்கிறது (1.2 லிருந்து 2 மடங்கு ஒவ்வொரு மாத்திரையிலும் உள்ளது) எனவே அவர்களது தயாரிப்பினை நாம் வாங்க வேண்டும். எனினும் போட்டியிடும் இருவகையான தயாரிப்புகளை ஏன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது? போட்டியிடும் தயாரிப்புகளின் வலி போக்கும் வலிமை, முறையான வலிமையை விட எவ்வாறு  துரிதமாக வேலை செய்கிறது என்பதை ஏன் சொல்லக்கூடாது?. கூடுதலான வலிமை உள்ளதை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?

அத்தோடு கூட ஆஸ்பிரின் மருந்தை உட்கொள்வதால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பேருக்கு மேல் மரணம் அடைகிறார்கள்.ACETAMINOPHEN அதுவும் குறிப்பாக TYLENOL பயன்படுத்துவதால் ஆண்டு ஒன்றுக்கு 5000 -கும் அதிகமானவர்களின் சிறுநீரகங்கள் சீர்கேடு அடைகின்றன என்கிற தகவலை யாரும் நமக்குச் சொல்லுவதில்லை.காலை உணவின் போது நாம் சாப்பிடும் உயிர்மச்சத்து மாத்திரையை விட கூடுதலான சத்து எந்த தானிய வகையில் இருக்கிறது என்பது பற்றி யார் கவலைப் படுகிறார்கள்?  அமில எதிர்ப்பு மருந்தில் சுண்னாம்பு கலந்து இருக்கிறது. இந்தச் சுண்ணாம்பு சத்து ஊட்டத்துக்கு அவசியம் என்பதை விட வயிற்றுப் பொருமலுக்குத் தேவையற்றது என்பதை யார் பொருட்படுத்துகிறார்கள்?இது போன்ற பல தவறான வழிகாட்டுதல்களையும் பொருப்பற்ற தவிர்த்தலையும் பயனீட்டாளர் செலவில்தான் செய்கிறது வணிகக்கலாச்சாரம்.
நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என எதிர் பார்க்கப்படுவது இல்லை. வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.அவ்வளவுதான்.

ஆதாயத்துக்காக இவ்விதத் தயாரிப்புகளைப் பரிந்துரைக்கும் உண்மையான நிபுனர்களும் அல்லது நிபுனர்கள் என மார்தட்டிக் கொள்ளும் பலரும் இடைவிடாத அடைமழை போல் ஏமாற்று வித்தையில் குதித்து இருக்கின்றனர்.வாடிக்கையாளர்களை மதிமயக்கும் நோக்கத்தில் துரோகம் செய்கின்றனர்.அறிவியலின் நம்பகத்தன்மையின் மேல் மக்களுக்கு இருக்கும் கண்ணோட்டத்துக்குள் நயவஞ்சகமான ஊழலை அறிமுகப் படுத்துகின்றனர்.இன்று ஓரளவு பெருமை படைத்த உண்மையான அறிவியலாளர்கள் கூட பெரும் நிறுவனங்களின் பொய்யான நுகர்வோராக நடிக்கும் வர்த்தக சூதாடி விளம்பரப் படங்கள் கூட வருகின்றன.அறிவியலாளரும் கூட பணத்துக்காக பொய் சொல்லலாம் என அவர்கள் கற்றுத்தருகின்றனர்.TomPaine எச்சரித்ததைப் போல, பொய்களுக்கு நம்மை ஆற்றுப்படுத்துகின்றனர்.பல்வேறு தீமைகளுக்கும் அடித்தளம் அமைக்கின்றனர்.
   
WHOLE LIFE EXPOSE-என்கிற வருடாந்திர பொருட்காட்சியின் நிகழ்ச்சி நிரல் என் முன்னே இருக்கிறது
சான்fபிரான்சிஸ்கோவில் புது யுகத் தொழிற்கண்காட்சி (NEW AGE EXPOSITION) நடந்தது.வழக்கம் போல பல்லாயிரக்கணக்கான மக்கள் அதனைக் காண வந்தனர்.மிகவும் சந்தேகத்துக்குறிய தயாரிப்புகள் பற்றி மிகவும் கேள்விக்குரிய நிபுணர்கள் தரகு வேலை பார்த்தனர்.அங்கே விளம்பரப்படுத்தப்பட்ட சில வாசகங்கள் கீழ்க்கண்டவாறு இருந்தன:
                                                                                                  "அடைபட்ட இரத்தப்புரதங்கள் வலியையும் வேதனையையும் எப்படி உருவாக்குகின்றன? _"பளிங்குக்கற்கள் என்பவை தாயத்துகளா அல்லது கற்களா?" (எனக்கென இது பற்றி ஒரு கருத்து இருக்கின்றது)."பளிங்குகள் வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கு ஒலி-ஒளி அலைகளை குவித்துத் தருவது போல்-சுருதி சேர்ந்த இசைவான மனிதர்களுக்கு ஆன்மீக அதிர்வலைகளைப் பெருக்கித்தரும்"_இது வானொலி மற்றும் தொலைகாட்சி எவ்வாறு செயல் படுகிறது என்பது பற்றிய மட்டமான புரிதலின் விளைவு ஆகும்.அல்லது , "தேவதை மீண்டும் வருகை-ஒரு காட்சி விளக்கச் சடங்கு " , மற்றொன்று "சமகால அனுபவம் அறிதலும் புரிதலும்", சகோ.சார்லஸ் வழங்கியது இது.".YOU SAINT GERMAIN AND HEALING THROUGH THE VIOLET FLAMES" வயலெட் சுவாலையால் குணப்படுத்தல்........இப்படியாக அது நீண்டு கொண்டிருக்கிறது.வாய்ப்புகள் பற்றிய ஏராளமான விளம்பரங்களுடன் கிடைக்கும் போலிகளுக்கு ஒத்திசைவாய்ப் பாடும்சேர்ந்திசைகள் ஆகியன எல்லாம் கிடைக்கின்றன WHOLE LIFE EXPO-வில்.

மனமொடிந்த புற்று நோயாளிகள் புனித யாத்திரை செல்கிறார்கள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு.அங்கே ஆவியுலத் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லிக்கொள்கிறவர்கள் நோயாளிகளின் உள்ளுறுப்புகளுக்குள் நுழைந்து பாதிக்கப்பட்ட உடற்பகுதிகளை வெளிக்கொண்டு வருவதாக ,கோழி ஈரல் அல்லது ஆட்டினுடைய இதயத்தின் துண்டுகளை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஏமாற்றுகிறார்கள்.அது வெற்றிகரமாக நடந்தேறுகிறது.மேற்கத்திய ஜனநாயக நாட்டின் தலைவர்கள் நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் பற்றி முடிவு எடுக்குமுன் சோதிடர்களையும் ஆன்மீக குருக்களையும் முறையாகக் கலந்து ஆலோசிக்கின்றனர்.   

    துப்புத்துலக்க முடியாத கொலை வழக்குகள் அல்லது காணாமல் போனவர்கள் இவற்றைக் கண்டறிய ESP  நிபுணர்களைக் காவல்துறை பயன்படுத்துகிறது. (இந்த நிபுணர்களோ பொது அறிவுக்கு மேலாக எதையும் யூகித்து விடுவதில்லை. ஆனாலும் காவல் துறை அவர்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது. எதிரி நாடுகள் கட்புலனுக்கு அப்பாற்பட்டதைக் காணும் திறமையை அதிகம் ஈட்டி விட்டதாகத் தெரிய வந்தால் உளவுத்துறை காங்கிரசின் தூண்டுதலின் பேரில்,ஆழத்தில் உள்ள நீர்முழுகிக் கப்பல்களைக் கண்டறிய ஆழ்ந்த தியானத்தின் மூலமாகக் கண்டறிய முடியுமா என்று மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுகிறது.ஒரு உளவியல் நிபுணர் / தொலை நோக்காளர் ஊசல் குண்டு மந்திரக்கோல் இவற்றை தேசப்படத்தின் மீது நகர்த்தி விமானத்தில் பறந்து புதிய கணிம வளங்களைக் கண்டு பிடிப்பதாக பாவலாப் பண்ணுகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு சுரங்க நிறுவணம் இவர்களுக்கு ஏராளமான டாலர்களை வாரி வழங்குகிறது.அவர்கள் சொல்வது பொய்த்துப் போனால் பணம் திரும்பி வராது.ஆனால் பலித்து விட்டால் கண்டுபிடிக்கப் படும் கணிமத்தில் அவர்களுக்குப் பங்கு தர வேண்டும்.ஒன்றுமே கண்டு பிடிக்கப்படவில்லை.இயேசுபிரானின் சிலைகளும் மாதாவின் சித்திரங்களும் கண்ணீர் வடிப்பதாகச் சொல்லப்படுகிறது. அன்பு உள்ளம் கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் தாமும் அந்த அற்புதத்தைக் கண்டதாகச் சாட்சியம் அளிக்கின்றனர்.

இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்ட அல்லது அதீதமான தகாத நம்பிக்கை கொண்ட அபத்தங்கள்.சில நேரங்களில் இம்மாதிரியான ஏமாற்றுதல்கள் வெகுளித்தனமாகவும் ஆனாலும் உடந்தையாகவுமிருக்கிறது.சில நேரங்களில் முன் கூட்டியே சிந்திக்கப்பட்ட கெட்ட நோக்குடையதாகவும் இருக்கிறது.வழக்கம் போல்பலிக்கடா ஆகுபவர் உணர்ச்சிப் பெருக்கில்ஆழ்ந்து விடுகிறார்.ஆச்சரியம் அச்சம் பேராசை துயரம் வந்து கவ்வுகின்றன.இவ்வாறு எளிதாக நம்பிவிடுவதில் பண விரையம் ஏற்படும்.அதைத்தான் P.T.BARNAM: "ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு ஏமாளி பிறக்கிறான்" என்று சொன்னார்.ஆனால் இது மேலும் ஆபத்தானதாகக் கூடும்.அரசுகளும் சமுதாயங்களும் விமர்சன ரீதியான சிந்தனையை இழந்து போனால் அபத்தங்களை விலை கொடுத்து வாங்குபவர்கள் மீது அனுதாபம் காட்டப் பட்டாலும் கூட விளைவுகள் விபரீதமாகி விடும்.

சோதித்து அறியப்பட்ட முடிவுகள் புள்ளி விவரங்கள் அவதானிப்புகள் அளவைகள் போன்ற தரவுகளிலிருந்து  அறிவியலில் நம்மால் புதிய கண்டு பிடிப்புகளைத் தொடங்க முடியும்.நாம் எதையாவது கண்டு பிடிக்கிறோம் என்று சொன்னால்,வெளிப்படையாகக் காட்ட முடிந்த வளமான விளக்கங்களைக் கொண்டு ஒவ்வொரு தகவலையும் முறையாக உரசிப்பார்க்கிறோம் என்று பொருள் படும்.அறிவியளாளர்கள் தங்களது பயிற்சியின் போது அபத்தம் அறியும் கருவிகளை உள்வாங்கித் திறம் பெருகின்றனர்.எங்கெல்லாம் புதிய சிந்தனைகள் முன் வைக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் இந்தக் கருவிகள் பயன் படுத்தப் படுகின்றன.இந்தக் கருவிகளின் கூரிய ஆய்வினை புதிய கருத்து தாக்குப் பிடிக்குமானால் அதனை நாம் மேலும் புடம் போட்டுப் பார்க்கின்றோம்.ஆனாலும் கூட பரிட்சார்த்தமாகத்தான் ஒப்புக் கொள்கிறோம்.அது செயற்படும் என உறுதியளித்த போதிலும்;அதனை வாங்க ஒருவர் விரும்பவில்லை என்றால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிலவற்றைக் கடைப் பிடிக்கலாம். சோதித்து உண்மையென நிரூபிக்கப் பட்டதும் பயனீட்டாளர்களால் முயற்சிக்கப் பட்டதுமான முறை அதுவாகும்.

அபத்தம் அறியும் அந்தக் கருவிப் பெட்டகத்தில் என்னதான் இருக்கிறது? சமய நம்பிக்கையற்ற சிந்தனைக்கான கருவிகள் அவை.(அய்யுறவான சிந்தனை).எந்தவொரு வாதம் கட்டுவிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியதாகவும் காரண காரியத் தொடர்பு உடையதாகவும் இருக்கிறதோ அல்லது பொய்யானதும் தவறானதும் ஆன வாதங்களைக் கண்டறியும் சாதங்களைக் கூர்மைப் படுத்துகிறதோ அது அய்யுறவு வாதம் எனவாகும்.தொடர்ச்சியான காரணங்களைப் பகுத்தறிந்து எட்டப்படும் முடிவை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது இங்கு கேள்வி அல்ல.ஆனால் தொடக்கப் புள்ளியில் இருந்து பின் தொடரும் முடிவுகள் சரியானவையா அல்லது தொடக்கப் புள்ளியே சரியானது தானா என்பதுவே கேள்வி ஆகிறது.

அபத்தம் அறியும் அந்தக் கருவிகளாவன:
 

 எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் அந்த தகவல்-உண்மை சுதந்திரமாக உறுதி செய்யப்பட வேண்டும்.

 கிடைக்கும் சாட்சியங்கள்-தரவுகள் மீது எல்லாக் கோணங்களில் இருந்தும்,அவற்றை முன் மொழிபவர்கள் ஆழ்ந்த விவாதம் நடத்த வேண்டும்.

 AUTHORITY-அதிகாரத்தில் உள்ளவர்கள்/ விற்பன்னர்கள் ஆகியோரின் வாதங்கள் வலுவற்றவை. தகுதி உடையவர்கள் கடந்த காலத்தில் தவறு செய்துள்ளனர். எதிர் காலத்திலும் அவர்கள் இவ்வாறே செய்வார்கள்.இதனை இன்னும் நேர்த்தியாகச் சொல்லுவதென்றால் அறிவியல் விற்பன்னர்கள் என யாரும் கிடையாது.மிஞ்சிமிஞ்சிப் போனால் நிபுணர்கள் இருக்கிறார்கள்

ஒன்றுக்கு மேற்பட்ட கருதுகோள்களை உருவாக்கி மோத விட வேண்டும். எதையாவது விளக்க வேண்டியிருப்பின் எந்தெந்த மாறுபட்ட வழிகளில் எல்லாம் சாத்தியமாகும் என்று சிந்திக்க வேண்டும்.ஒவ்வொரு மாற்றுக் கருத்தினையும் மறுதலிப்பதற்கான பரிசோதனைகள் பற்றிப் பிறகு சிந்திக்க வேண்டும்.மறுதலிக்கவே முடியாமல் எது மிஞ்சி நிற்கிறதோ ,அதுவே, "பல தரப்பட்ட கருதுகோள்களின் செயற்பாட்டில் "- டார்வீனிய முறைப்படி இறுதித் தேர்வு செய்யப் பட்டது எனவாகும். உங்கள் மனதுக்குப் பிடித்த முதல் கருதுகோளைப் பின் பற்றிச் செல்வதை விட இத்தகையக தேர்வே சரியான விடையாக இருக்கும் வாய்ப்பினைப் பெறுகிறது.

 குறிப்பு :இத்தகைய மனதுக்குப்பிடித்த கருதுகோளின் பின் செல்லல் என்பது JURY TRIAL - எனப் படும் அறங்கூறாயத்தின் நடுநிலையைப் பாதிக்கும் போக்காக இருக்கிறது.சில நடுவர்கள் வாதங்களின் ஆரம்ப கட்டத்திலேயே தங்கள் மன நிலையை ஒரு போக்காக வரித்துக் கொண்டு, தங்கள் துவக்க கால மனப்பதிவை ஆதரிக்கும் சாட்சியங்களை மட்டும் மனதில் இருத்திக் கொண்டு மாறுபட்ட சாட்சியங்களை மறுதலிக்கிறார்கள் என்பதனை கடந்த கால ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.மாறுபட்ட கருதுகோள்கள் செயல்படும் என்பது அவர்களது மண்டையில் உறைப்பது இல்லை.
 

 உங்களுடைய சொந்தக்  கருதுகோள் என்பதனால் அதன் மீது அதிகப் பற்று வைக்காதீர்கள். அந்தக் கருத்து ஏன் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்ற கேள்வியினை எழுப்புங்கள். மாற்றுக் கருத்துடன் நியயமான முறையில் அதனை ஒப்பு நோக்கிப் பாருங்கள். உங்கள் கருதுகோளினை மறுப்பதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்க முடியுமா என்று முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவ்வாறு முயற்சி செய்யவில்லை என்றால் மற்றவர்கள் அதனைச் செய்து விடுவார்கள். 

 அளவைப்படுத்துங்கள்.  நீங்கள் விளக்குவதற்கு எடுத்துக் கொண்ட விஷயத்தில் ஏதாவது எண்ணிக்கை வகையிலான அளவுகள் இருப்பின்போட்டியிடும் மற்ற கருதுகோள்களில் இருந்து வேறுபடுத்தி அறிய முடியும்.மேம்போக்காகவும் தரம் பற்றியதாகவும்(குணாம்சம்) இருப்பின் அது தொடர்பான பல விளக்கங்களை அளிக்க வேண்டியிருக்கும்.தரம் சார்ந்த உண்மைகளையும் தேட வேண்டிய கடமை இருக்கிறது எனினும் அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் சிரமமான சவாலுக்கு இழுக்கும் தன்மையானதாக இருக்கும்.

 சங்கிலித் தொடரான வாதங்கள் இருப்பின் அவற்றின் ஒவ்வொரு கண்ணியும்( LINK ) செயற்ப்படுவதாக இருக்க வேண்டும். பெரும்பாலானவை செயல் படும் என்பதாக இருப்பது போதாது.துவக்கம் கூட இவ்விதிக்கு உள்ளடங்கியதாகவே இருக்க வேண்டும். 
 

 OCCAM `S RAZOR : கத்திமுனையால்செதுக்குவது போல் தேவையில்லாதவற்றை செதுக்கி விட வேண்டும்.  இரண்டு கருதுகோள்கள் ஆய்வுக்கு வருமெனில் எளியதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 

 குறைந்த பட்சம் கொள்கையளவிலாவது அந்தக் கருதுகோளை மறுதலிக்க முடியுமா எனப் பார்க்க வேண்டும் சோதித்து அறிய முடியாதவை  நிலைநிறுத்த முடியாதவை குற்றம் கண்டு பிடிக்க முடியாதவை என்ற வகையிலான கருத்துகள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல.மிகப் பெரியதான அண்ட கோளத்தில் பிரபஞ்சமும் அதில் உள்ள அனைத்தும் வெறும் அடிப்படைத் துகள்கள்- ஒரு எலக்ற்றான் என வைத்துக் கொள்வோம்.ஆனால் நமது பிரபஞ்சத்துக்கு வெளியில் இருந்து எந்தத் தகவலும் பெற முடியாது எனின் அந்தக் கருத்து நிரூபிக்க முடியாதது என ஆகி விடும் அல்லவா?.உறுதிப்பாடுகளை  வற்புறுத்துவதைத் தடுக்க உங்களால் முடிய வேண்டும்.தலை கீழாகப் புரட்டிப் பார்க்கும் அய்யுறவு வாதிகளுக்கு ,அவர்கள் உங்களது நியாயத்தைப் பின் பற்றவும் உங்களது சோதனைகளை நகலெடுத்து தாமே செய்து பார்க்கவும் உங்களுக்குக் கிட்டிய அதே விளைவுகள் அவர்களுக்குக் கிட்டுகின்றதா என்பதைக் கண்டறியவும் வாய்ப்புத் தர வேண்டும்.

கவனமாக வடிவமைக்கப்பட்டதும் கட்டுப்பாடானதும் ஆன சோதனைகள் மீது நம்பிக்கைவைப்பதும் சார்ந்திருப்பதும் தான் நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல் சரியான திறவு கோல் ஆகும்.வெறுமனே ஆழ்ந்து சிந்திப்பதன் மூலமாக மட்டும் நாம் அதிகமாகக் கற்றுக்கொள்ள முடியாது.முதலில் மனதில் உதித்த விளக்கங்களுடன் திருப்தி அடைந்து போகும் விருப்பம் இருக்கத்தான் செய்யும்.ஒன்றுமே இல்லாததற்கு இந்த நிலை மேல் தான்.ஆனாலும் நாம் பலவற்றையும் கண்டு பிடிக்கும் போது என்ன நிகழுகிறது? அவற்றுள் ஒன்றை எவ்வாறு  தேர்ந்து எடுப்பது? நாமே அவ்வாறு தேர்வு செய்யக் கூடாது.சோதனைகளே அதனை அறுதியிட அனுமதிக்க வேண்டும்.fபிரான்சிஸ் பேக்கன் இது பற்றி சிறந்த அறிவுரை¨யை வழங்கி உள்ளார்:


  " புதியதைக் கண்டு பிடிக்க விவாதங்கள் மட்டும் போதாது.விவாதங்களின் நுட்பத்தை விட இயற்கையின் நுட்பங்கள்பல மடங்கு பெரியவை."
கட்டுப்படுத்தும் சோதனைகள் அவசியம்.உதாரணமாக,ஒரு புதிய மருந்து அப்போதைய ஒரு நோயை 20 விழுக்காடு கட்டுப்படுத்துகிறது என்று சொல்லப்பட்டால்; ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகை ,அதாவது சோதனைக்கு உட்படுத்தப் படுகிறவர்கள்,வெறும் இனிப்பு மாத்திரையை புதிய மருந்து என நினைத்துக் கொள்வதாக வைத்துக் கொண்டோமானால் அவர்களும் கூட 20 விழுக்காடு நோய் உடனடியாகக் குறைவதாக நினைக்கக் கூடும் அல்லவா?

மாற்றமானவைகளை தனித் தனியாகப் பிரித்து அறிய வேண்டும். உங்களுக்கு கடற்பயணத்தின் போது தலை சுற்றல் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.அப்போது உங்களுக்கு அக்குப்பிரசர் எனப்படும் குறிப்பிட்ட நரம்பு முடிச்சுகளை அமுத்தி விடும் சிகிச்சையும் 50 மில்லி கிராம் MECLIZINE எனப்படும் மருந்தும் தரப்படுவதாக வைத்துக்கொள்வோம்.அடுத்த முறை கடற்பயணத் தலைச் சுற்றல் வரும் போது இவற்றுள் ஏதேனும் ஒரு சிகிச்சையை நீங்கள் எடுத்துக் கொண்டால் மட்டுமே, மருந்து உட்கொண்டதால் குணமடைந்தீர்களா அல்லது அமுக்கு வளையத்தால் குணமடைந்தீர்களா என்பதை உறுதி செய்ய முடியும்.

இப்போது நீங்கள் கடற்ப்பயணத்    தலைச்சுற்றல் சோதனைக்கு ஆட்பட இசைந்ததுபோல் அறிவியல் சோதனைகளுக்கு அர்பனிக்கத் தயாராகவில்லை என்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது வெவ்வேறு விதங்களை பிரித்துப் பார்க்க இயலாது நீங்கள் இருவிதமான சிகிச்சைகளையுமே எடுத்துக் கொள்வீர்கள். நடைமுறை ரீதியான விளைவை அடைந்து விட்டோம் அதனால்
மேலும் அறிவு பெறுவற்காக வீண்சிரமப்படத் தேவை இல்லை என்று நீங்கள் சொல்லக் கூடும்.
   
        விளைவுகளை மதிப்பிட்டுப் பார்க்கும் வலுவான சாத்தியகூறுகள் உள்ள ஒரு கண்டுபிடிப்பினை எதிர்பார்த்து பெரும்பாலும் பரிசோதனைகள் செய்யக்கூடாது. (SIC) உதாரனமாக ஒரு புதிய மருந்தை பரிசோதித்து பார்க்கும்போது மருத்துவரிடமிருந்து எந்த நோயாளிகளுக்கு  அந்த மருந்து கொடுக்கபட்டது என்பதைவிட எந்த நோயாளிகளுக்கு நோய் அறிகுறிகள் குணம் அடைந்தது என்பதை அறிய நீங்கள் விரும்பக் கூடும். தற்செயலாக உணர்வுக்குள் புகாமலேயே இந்தத் தகவல் அவர்களது முடிவை பாதிக்கக் கூடும். அதற்குப்பதிலாக யாருக்கெல்லாம் புதிய மருந்து தரப்பட்டதோ அவர்களது பட்டியலும், நோய் அறிகுறிகள் யாருக்கெல்லாம் குறைந்ததோ அவர்களது பட்டியலும், தனிதனியாக அலசப்பட / உறுதி செய்யப்படவேண்டும். பின்னர் ஒன்றுக்கொன்றான தொடர்பு எவ்வாறு இருக்கிறது என்பதை நீங்கள் நிர்ணயிக்க முடியும். அல்லது குற்றவாளியை அடையாளம் காண்பதற்காக நடத்தப்படும் அணிவகுப்பின் போது அதற்குப் பொறுப்பான காவல் துறை அதிகாரிக்கு முக்கிய குற்றவாளி யார் என்பது தெரிந்திருந்தால் உணர்வுபூர்வமாகவோ அல்லாமலோ அது சாட்சியத்தின் மீது செல்வாக்கு செலுத்தும்.

    ஒரு கருத்தைப் பற்றிய உரிமை கோருதலை மதிப்பீடு செய்யும் போது என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தருவதோடு கூட, ஒரு நல்ல அபத்தம் அறியும் கருவிப்பெட்டகம், நாம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதைச் சொல்லுவதாகவும் இருக்கவேண்டும். தர்க்கத்துக்குப் புறம்பான பொய்களையும் தவறுகளையும் அலங்காரச் சொற்களையும் அடையாளம் கண்டுகொள்ள இது உதவும்.  


 மதத்திலும் அரசியலிலும் பல நல்ல எடுத்துக் காட்டுகளை நீங்கள் இது தொடர்பாக காண முடியும். ஏனெனில் இதன்மூலம்  பிழைப்பு  நடத்துபவர்கள் பெரும்பாலும் இரு முரண்பாடான கருத்துகளிடையே சமரசம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இத்தகைய பொய்களில் சில:

 
  AD HOMINEM ; - மனிதனைக் குறி வைத்து  எனப் பொருள் படும் இலத்தீன் சொற்றொடர் இது


.இதன் படி ஒரு வாதத்துக்கு எதிர் வாதம் செய்வதற்குப் பதிலாக /மாற்றுக் கருத்தை வைப்பதற்குப் பதிலாக மாற்றுக் கருத்து உடைய மனிதனைத் தாக்குவதாகும் ( எ.கா ) REV.DR.SMITH அவர்கள் விவிலிய அடிப்படை வாதி எனவே பரிணாம வளர்ச்சி பற்றிய அவரது கருத்தைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.


  ARGUMENT FROM AUTHORITY ; அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து வரும் வாதம். 

 

 எடுத்துக்காட்டாக குடியரசுத் தலைவர் நிக்சன் மீண்டும் அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்,ஏனெனில் தென் கிழக்கு ஆசியாவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு ரகசியத் திட்டத்தை வைத்திருக்கிறார். ஆனால் அது இரகசியம் என்பதால் வாக்காளர்கள் இதன் சாதக பாதகங்களை மதிப்பீடு செய்ய முடியாது.அவர் குடியரசுத் தலைவர் என்பதனால் அவரை நம்ப வேண்டும் என்ற வாதம் தவறாகிப் போகிறது.
 


 ARGUMENT FROM ADVERSE CONSEQUENCES ;பாதகமான பின் விளைவுகள் ஏற்படும் என்கிற வாதம்.  

 எடுத்துக்காட்டாக நாம் செய்யும் புண்ணியம் பாவம் ஆகியவற்றைக் கவனித்து பரிசுகளும் தண்டனையும் வழங்கும் கடவுள் ஒருவர் இருந்தே ஆக வேண்டும்.அப்படி இல்லையென்றால் சமுதாயம் மேலும் சீர்கெட்டுப் போய் விடும்.ஒரு வேளை ஆட்சி செய்ய முடியாமல் கூட ஆகிவிடக் கூடும்.அல்லது மிகவும் பிரபலமான கொலை வழக்கு ஒன்றில் நிரபராதி என எதிர் வழக்கு ஆடுபவர் குற்றவாளி என தண்டிக்கப் பட வேண்டும்.இல்லையெனில் மற்றவர்கள் தம் மனைவியைக் கொல்ல ஊக்குவிப்பதாகி விடும்.

குறிப்பு: ரோமானிய வரலாற்றியலாளரான போலிபியஸ் இன்னும் மோசமான விதி முறை வகுத்தார்.அவர் என்ன சொல்கிறார் என்றால்: மக்கள் திரளானது நெறி பிறழ்ந்தவர்களாகவும், கட்டுக்கடங்காத ஆசை கொண்டவர்களாகவும், எளிதில் சினம் கொள்ளக் கூடியவர்களாகவும்,பின் விளைவுகள் பற்றிக் கவலைப் படாதவர்களாகவும் இருப்பதால் ,அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எப்போதும் பயமுறுத்தியே வைத்திருக்க வேண்டும்.ஆகவே,மரணத்துக்குப் பின் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையையும் புகுத்தினார்கள் .
 


 APPEAL TO IGNORANCE ;அறியாமைக்கு  வக்காலத்து வாங்குவது.

எதுவெல்லாம்  தவறு என்று நிரூபிக்கப்படவில்லையோ அதுவெல்லாம் உண்மை -எதுவெல்லாம் சரி என்று நிரூபிக்கப்படவில்லையோ அதுவெல்லாம் பொய் என்ற வாதம். விண்வெளியில் சுற்றி வரும் அடையாளம் காணப்படாத பொருட்கள் பூமிக்கு வரவில்லை என வலியுருத்தும் சாட்சியங்கள் இல்லாமையால் இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் அறிவுள்ள உயிர்கள் இல்லை என்பது அல்லது 70 KAZILLION உள்ளன ஆனாலும் அவற்றுள் ஒன்று கூட பூமியைப் போல் ஒழுக்கத்தில் முன்னேறியதாக இல்லை எனவே பிரபஞ்சத்துக்கு நாம் தான் இன்னும் மைய்யமாக இருக்கிறோம்.ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்படக்கூடியவற்றின் மீதான விஷயங்களின் மீதுஅவசரப்பட்டு முடிவெடுப்பதை இந்த சொற்றொடர் மூலம் விமர்சிக்க முடியும்.சாட்சியம் இல்லாமை என்பது இல்லாமையின் சாட்சியம் ஆகி விடாது.


  SPECIAL PLEADING ; அதீத சொல்லலங்காரமும் சூழ்ச்சியும் கலந்த வாதம்.


ஒரு முன் மொழிவு ஆழமான பிணைப்பு நடையில் இருப்பதில் இருந்து மீட்டல்.எடுத்துக்காட்டாக தனது கட்ட¨ளையை மீறி ஆப்பிள் பழம் ஒன்றைத் தின்று விட்டாள் என்பதற்காக இரக்கமுள்ள இறைவன் எதிர்கால சந்ததியினரை எவ்வறு தண்டிக்க முடியும்? சுதந்திரமான விருப்பம் என்ற நுட்பமான கோட்பாடு உங்களுக்குப் புரியவில்லை.அல்லது ,தந்தை மகன் புனித ஆவி மூன்றுமே எப்படி ஒருவரிடமே எப்படி இருக்க முடியும்? உங்களுக்கு தெய்வீக அற்புதமான திருத்துவம் புரியவில்லை. அல்லது யூத மதமும் கிருத்துவமும் இஸ்லாமும் தத்தம் வழியில் வலியுறுத்தும் அன்பும் கருணையும் செலுத்தும் வீரமிக்க நடவடிக்கைகளின் பேரால் இவ்வளவு காலமாக இவ்வளவு கொடுமைகளை இழைப்பதற்கு கடவுள் எப்படி அனுமதித்து வருகிறார்? திரும்பவும் நீங்கள் சுதந்திரமான விருப்பம் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.இருந்தபோதிலும் கடவுள் புதிரான வகையில் செயல் படுகிறார்.

  

 BEGGING THE QUESTION  யூகத்தின் பேரில் வாதித்தல்/விடையைத் தானே யூகித்து வலியுறுத்தல்

எடுத்துக் காட்டாக: கொடுமையான குற்றங்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்க வேண்டும். மரண தண்டனை நிறைவேற்றப் படுவதால் வன்முறைக் குற்றங்கள் குறைந்து விடுகின்றனவா? இலாபம் ஈட்டுவதற்காக முதலீடு செய்பவர்கள் தொழில் ரீதியில் சில சீரமைப்பு செய்ததால் பங்குச்சந்தையில் விலை குறைந்து விட்டதா? விளைவு எற்படுத்தும் சீரமைப்பின் பாத்திரம் மற்றும் இலாபம் ஈட்டுவது என்பதற்கு சுதந்திரமான சாட்சியங்கள் இருக்கின்றனவா?

 OBSERVATIONAL SELECTION வாய்ப்பான/ சாதகமான சூழ்நிலையைக் கண்காணித்தல் 


தத்துவவாதி பிரான்சிஸ் பேக்கன் விவரித்ததைப் போல் குத்துக்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு தவிர்த்தலுக்கான புள்ளிகளைக் கண்டு கொள்ளாமல் விடுவது.

குறிப்பு :இதற்குப் பொருத்தமானதொரு எடுத்துக்காட்டு என இத்தாலிய இயற்பியல் அறிஞர் என்ரிக்கோ பெர்மி பற்றிச் சொல்லப்பட்டதாகும்.அவர் புதிதாக அமெரிக்க கரைக்கு வந்தார்.மன்ஹாட்டன் அணு ஆயுதத்திட்டத்தில் சேர்க்கப் பட்டார்.இரண்டாவது உலகப் போரின் போது அமெரிக்கத் தளபதிகளை நேருக்குநேர் சந்தித்தார்.
குறிப்பிட்ட ஒருவர் பற்றி அவர் பெரிய ஜெனரல் என்பதாக அவரிடம் சொல்லப் பட்டது. பெரிய ஜெனரல் என்பதற்கான வரையறை என்ன என்று பெர்மி குறிப்பாகக் கேட்டார்.பல போர்களில் தொடர்ந்து வென்றவரை  ஜெனரல் என நான் யூகிக்கிறேன்.எத்தனைப் போர்கள்? கூட்டிக்கழித்து அய்ந்து என அவர்கள் ஒப்புக்கொண்டனர். அமெரிக்க ஜெனரல்களில் எந்தப் பிரிவு மகத்தானது? மீண்டும் அப்படி இப்படி கூட்டிக் கழித்து சில விழுக்காடுகள் என்பதாக ஒப்புக் கொண்டணர்.

ஆனால் கற்பனை செய்து பாருங்கள்.மிகப் பெரிய ஜெனரல் என யாரும் இல்லை. எல்லா படைகளுமே சம பலம் வாய்ந்தவை.ஒரு போரில் வெற்றி பெறுவது என்பது முற்றிலும் தற்செயலானது.இரண்டில் ஒரு போரில் வெற்றி பெறுவது அல்லது 1/2 , 1/4 , 1/8 ,1/16 என்ற வரிசையான அய்ந்து போர்களில் 1/32 அதாவது இது மூன்று விழுக்காடு என ஆகும்.அமெரிக்க ஜெனரல்களில் ஒரு சிறிய விழுக்காடு தான் அதுவும் அய்ந்து தொடர்ந்த போர்களில் வெற்றி பெற வேண்டும் என எதிர் பார்ப்பீர்கள்.யாராவது பத்துப் போர்களில் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார்களா?

  STATICS OF SMALL NUMBERS ;குறைந்த எண்னிக்கையிலான புள்ளி விவரங்கள்


இது கண்கானிப்பதுடன் நெருங்கிய உறவு கொண்டது இது.எடுத்துக் காட்டாக அய்ந்து பேர்களில் ஒருவர் சீனர் என்று சொல்கின்றனர்.அது எப்படி உண்மையாகும்? எனக்கு நூற்றுக் கணக்கானவர்களைத் தெரியும்.அவர்களில் யாருமே சீனர்கள் இல்லை " உங்கள் உண்மையான" அல்லது "வரிசையாக மூன்று ஏழுகள் போட்டேன் இன்றிரவு  நான் தோற்க முடியாது."

 MISUNDERSTANDING OF THE NATURE OF STATISTICS ; புள்ளி விவரங்களின் தன்மை பற்றிய தவறான புரிதல்


எடுத்துக்காட்டாக குடியரசுத் தலைவர் அய்சனோவர் ,அமெரிக்கர்களில் சரி பாதி சராசரி அறிவுத் திறமைக்கும் கீழே உள்ளனர் என்பதைக் கேட்டு திகைப்பும் பீதியும் அடைந்தார்.

 INCONSISTENCY ; முன்னுக்குப் பின் முரன் படுதல்.


திறமையான ஒரு இராணுவ எதிரி எவ்வளவு சேதம் ஏற்படுத்த முடியும் என்பதை முன் கூட்டியே யூகிக்கவேண்டும் ஆனால் சிக்கன நடவடிக்கையாக இன்னமும் நிரூபிக்கப் படாததும் சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைப்பதுமான அறிவியல் கண்டு பிடிப்புகள் பற்றி அலட்சியமாக இருக்கலாம் அல்லது முன்னள் சோவியத் யூனியனில் மக்களின் ஆயுட்காலம் குறைவாக இருந்ததற்கு கம்யூனிச ஆட்சி தான் காரணம் எனச் சொல்லிக்கொண்டே அமெரிக்காவில் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு முதலாளித்துவம் தான் காரணம் என்று குற்றம் சாட்டத் தவறுவது.( தொழில் மயமான தேசங்களில் இதுவே மிக அதிக மானது.)அல்லது எதிர் காலத்தில் பிரபஞ்சம் எப்போதும் இருக்கும் ஆனால் கடந்த காலத்தில் அது அளவிட முடியாத நீண்டகாலமாக இருந்தது என்ற சாத்தியப்பாட்டினை கொச்சைப் படுத்துவது.

  NON SEQUITUR ;அது தொடருவதில்லை என்ற பொருள்படும் இலத்தீன் சொற்றொடர்


.எடுத்துக்காட்டாக- நமது தேசம் வெல்லும் ஏனெனில் கடவுள் மகத்தானவர்-ஆனால் ஒவ்வொரு தேசமும் இதனை உண்மை எனவே நம்புகின்றனவே. ஜெர்மானியர்கள் இதையே GOTT MIT UNS  என்று சொல்கிறார்கள்.இந்தப் பொய்க்குப் பலி ஆகுபவர்கள் மாற்று சாத்தியப்பாடுகள் குறித்து கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.
 


 POST HOC ERGO PROPTER HOC :அதன் பின் இது நிகழ்ந்தது .எனவே அதனால் தான் நிகழ்ந்தது என்ற சொற்றொடருக்கான இலத்தீன் வடிவம் இது

. எடுத்துக்காட்டாக ஜெய்மெ கார்டினல் சின். மணிலாவின் ஆர்ச் பிஷப்  சொன்னார் :60 வயதுக் கிழவி போல் தோற்றமளிக்கும் ஒரு 26 வயதுப் பெண்ணை எனக்குத் தெரியும்.அவள் கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் தான் அப்படி இருக்கிறாள்.பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன் அணு ஆயுதங்கள் இல்லை.
 EXCLUDED MIDDLE OR FALSE DICHOTOMY ;தொடர்ச்சியான சாத்தியப்பாடுகளின் முதலாவதும் முடிவானதும் பற்றிச் சிந்திப்பது. 


 எடுத்துக் காட்டாக என் கணவர் நல்லவர் அவரைப்பின் பற்றுங்கள் நான் எப்போதுமே தவறு செய்பவள்.அல்லது ஒன்று நாட்டை நேசிக்கிறாய் இல்லையெனில் வெறுக்கிறாய்.தீர்வுக்கான பங்கு உனக்கு இல்லையென்றால் நீ பிரச்சினையின் பங்காக இருக்கிறாய்.

  SHORT TERM V/s LONG TERM ; குறுகிய கால நோக்கு எதிர் /நீண்ட கால நோக்கு

.
ஏற்கனவே சொல்லப்பட்ட இடையில் விடுபடுவதின் உப தலைப்பு இது.ஆனால் முக்கியமானது என்பதால் ச்ற்ப்பு கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். எடுத்துக் காட்டாக ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளுக்கு உணவு வழங்குதல் ,பள்ளி முன் பருவக் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுதல் போன்ற திட்டங்களுக்குச் செலவிட முடியாது.
தெருக்களில் நடக்கும் குற்றங்கள் பற்றி அவசர கவனம் செலுத்த வேண்டும்.அல்லது நமக்கு மிகப் பெரிய பட்ஜெட் பற்றாக்குறை இருக்கும் போது விண்வெளி ஆராய்ச்சியிலும் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியிலும் ஏன் ஈடுபட வேண்டும்?

   SLIPPERY SLOPE ,RELATED TO EXCLUDED MIDDLE  -இடையில் ஒதுக்கியது பற்றிய வழுக்குப்பாதை.


எடுத்துக் காட்டாக கறுவுற்ற முதல் வாரங்களில் கருச்சிதைவை அனுமதித்தால் முழு வளர்ச்சி பெற்ற குழந்தையைக் கொல்வதைத் தடுக்க முடியாது.அல்லது அதற்கு எதிரிடையாக ஒன்பதாவது மாதத்தில் கூட கருச்சிதைவை அரசு தடுக்குமானால்வெகு விரைவில் கருவுறும் போது நமது உடலை என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லும்.

  CONFUSION OF CO RELATION AND CAUSATION ;ஒன்றுக்கொன்றான காரணகாரியத் தொடர்பு பற்றிய குழப்பம் .


எடுத்துக் காட்டாக படிப்பறிவு குறைந்தவர்களை விட கல்லூரிப் பட்டதாரிகளில் ஒரினப் புணர்ச்சியாளர்களதிகம் இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது .எனவே கல்விதான் மக்களை ஒழுங்கீனம் உள்ளவர்களாக மாற்றுகிறது.அல்லது யுரேனஸ் கிரகம் நெருங்கி வரும் போதெல்லாம் ஆண்டிஸ் மலைத்தொடரில் பூகம்பம் ஏற்படுகிறது.எனவே இப்படிப்பட்ட காரண காரியத் தொடர்பு மிகவும் அருகில் உள்ளதும் மிகப்பெரியதுமான ஜுபிடர் கிரகத்துக்கு சொல்லப்படுவதில்லை.பின்னால் உள்ளதுதான் முன்னே உள்ளதற்குக் காரணம் ஆகிறது.

  குறிப்பு; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வன்முறைக் காட்சிகளைக் காணும் குழந்தைகள் வளரும் போது வன்முறையாளராகும் வாய்ப்பு இருக்கிறது.ஆனால் தொலைக்காட்சியா வன்முறக்குக் காரணமாக இருக்கிறது? அல்லது வன்முறையை நேசிக்கும் குழந்தைகள் அத்த்கைய காட்சிகளை விர்ம்பிப் பார்க்கிறார்களா?இவை
இரண்டு மே உண்மையாய் இருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளனதொலைக்காட்சி வன்முறைக்கு வக்காலத்து வாங்குபவர்கள் சொல்கிறார்கள், தொலக்காட்சிக்கும் யதார்தததுக்குமான வேறுபாட்டை எவர் ஒருவரும் பிரித்தறிய முடியும்.ஆனால் சனிக்கிழமை காலைகளில் வரும் குழந்தைகள் நிகழ்ச்சிகளிலொரு மணி நேரத்தில் 25 வன்முறைக்காட்சிகளாவது இடம் பெறுகின்றன. குறைந்த பட்சம் ,முரட்டுத்தனம் கொடூரம் பற்றிய இயல்பான உணர்வை இவை மழுங்கடிக்கின்றன.பெர்யவர்கள் மனதில் தவறான நினைவுகளைப் புகுத்த முடியும் என்றால் ஆரம்பப் பள்ளி க் காலம் தொடங்கி பட்டம் பெரும் வரை குறைந்தது  பத்து லட்சம் வன்முறைக் காட்சிகளைக் காணும் குழந்தைகளின் கதி என்னவாகும்?

இப்படிப்பட்ட  தர்க்க ரீதியானதும் பகட்டுப் பிணைப்பு உள்ளதுமான தவறுகள் பற்றித்தெரிந்து கொள்வது நமது கருவிப் பெட்டகத்தை முழுமையாக்குகிறது.எல்லாக் கருவிகளையும் போலவே இந்த அபத்தம் அறியும் கருவிகளும் தவறாகப் பயன் படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.சுய சிந்தனைக்குப் பதிலாக குருட்டுப் பாடம் ஆகி விடக்கூடும்.இடம் பொருள் எவல் தெரியாமல் பிரயோகப் படுத்தக் கூடும்.ஆனால் நியாயமாகப் பின் பற்றப்பட்டால் உலகத்தில் மாற்றங்கள் கொண்டு வர முடியும். குறைந்த பட்சம் மற்றவர்களிடம் நமது வாதங்களை வைக்கு முன்னரும் மதிப்பீடு செய்கையிலும் உதவி செய்யும்.

                                       thanks thinnai.com

கார்ல் சாகன் கட்டுரைகள்

அபத்தம் அறியும் நுண்கலை - 1

கார்ல் சாகன்


       
    எனது பெற்றோர்கள் மறைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நான் அவர்களிடம் மிகவும் பாசமாக நெருக்கமாக இருந்தேன். இன்னமும் கூட அவர்களது பிரிவு என்னை வாட்டுகிறது. எப்போதுமே அது வாட்டிக் கொண்டுதான் இருக்கும். நான் அவர்களிடம் கண்டதும் நேசித்ததுமான ஆளுமையும் சாரமும் உண்மையிலேயே இன்னும் கூட எங்கோ உலவுவதாக நம்புகிறேன்.

        அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டுமானால் அதிகமாக ஒன்றும் கேட்டுவிட மாட்டேன். வருடத்தில் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் மட்டுமாவது அவர்களது பேரக்குழந்தைகள் பற்றி ப் பேசவும், நான் இன்னும் அவர்களை நேசிக்கிறேன் என்பதை நினைவு படுத்தவும், சமீபத்திய சம்பவங்கள் பற்றி உரையாடவும், அவகாசம் கிடைத்தால் போதும். எவ்வளவுதான் குழந்தைத்
தனமாகத் தோன்றிய போதிலும் எனக்குள் ஒரு பகுதி இருக்கிறது, அது அவர்கள் இப்போது எப்படி இருப்பார்கள் என்ற வியப்பில் ஆழ்ந்து இருக்கிறது. "எல்லாமும் சரியாக இருக்கிறதா?" என அவர்களைக் கேட்க விரும்புகிறது. சாகும் தருவாயில்
என்னுடைய தந்தையார் இருக்கும் போது அவரிடம் கடைசியாக நான் சொன்ன வார்த்தை:" பத்திரமாக இருங்கள்!" என்பதாக நினனைவுக்கு வருகிறது.

சில சமயங்களில் எனது பெற்றோர்களுடன் பேசுவது போல கனவு காண்கிறேன். கனவுலகில் ஆழ்ந்திருக்கும் போதே திடீரென்று "அவர்கள் உண்மையில் சாகவில்லை. இதுவெல்லாம் தவறு" என்ற உணர்வு என்னை ஆட்டிப்படைக்கிறது. ஏன்? அவர்கள் இங்கே தான் உயிரோடும் நலமாகவும் இருக்கிறார்கள் - அப்பா வேடிக்கையான விடுகதைகள் போடுகிறார். "மப்ளர் கட்டிக்கொள் குளிராக இருக்கிறது பார்" என்று மிகவும் கரிசனத்தோடு அம்மா சொல்கிறார். நான் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும் போது இந்தத் துயரக்கதையின் சுருக்கம் நிழலாடுகிறது. வெளிப்படையாகச்சொன்னால் சாவுக்குப் பின்னரும் வாழ்க்கை
தொடருவதாக நம்பும் ஏதோ ஒன்று எனக்குள் இருக்கிறது. இதற்குத் தேவையான சாட்சிகள் ஏதாவது இருக்கிறதா என்பது பற்றி நான் பொருட்படுத்துவதில்லை.
     
எனவே,அவ்வப்போதோ அல்லது மறைந்த தனது கணவரின் ஆண்டு நிறைவு நாளன்றோ அன்னாரது கல்லரைக்குச் சென்று மானசீகமாக உரையாடும் பெண்களைப் பார்த்து நான் வாய்விட்டு சிரிப்பதில்லை.அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதன்
மெய்ப்பொருள் குறித்து எனக்கு அய்யப்பாடு இருந்தால் பரவாயில்லை.நான் சொல்வது அது பற்றியது அல்ல.ஆனால் மனிதனாக இருப்பதைப் பற்றியது.

அமெரிக்காவில் இருக்கும் வயது வந்தவர்களிடையே மூன்றில் ஒரு பங்கினர் ஏதோ ஒரு வகையில் இறந்தவர்களோடு தொடர்பு ஏற்படுவதாக நம்புகின்றனர்.1988- தொடங்கி இந்த எண்ணிக்கை 15 விழுக்காடு அதிகரித்து விட்டதாகத் தெரியவருகிறது.அவர்களில்
நான்கில் ஒரு பகுதியினர் ஆன்மா வேறொரு உடலில் புகுவதாக நம்புகின்றனர்.

அதனால்,இறந்தவர்களின் ஆவியோடு பேசும் ஊடகமாக செயல்படும் பம்மாத்தை நான் எற்றுக்கொள்வதாகப் பொருள்படாது.அந்த நடைமுறை ஊழல் மலிந்தது என்பது எனக்குத் தெரியும்.பூச்சிகளும் பாம்புகளும் தங்கள் மேல் தோலை உறித்து விட்டு
நழுவுவதைப் போல எனது பெற்றோர்களும் தமது உடலின் வெளித்தோலை மட்டும் விட்டுப் பிரிந்து எங்கோ சென்றுள்ளனர் என்பது எனக்குத் தெரியும்.இத்தகைய உணர்வே என்னை, அறிவற்ற மந்திரம் செபிப்பவர்கள்,அல்லது தங்களது நினைவிலி மனம் பற்றிய
உணர்வு இல்லாதவர்கள் ஆயினும் இயல்பானவர்கள்,அல்லது யாருடனும் சேராமல் தனிமை தேடும் மனநோயாளிகள் ஆகியோருக்கு , இறையாக்கி விடும் என்பது எனக்குப் புரிகிறது.தயக்கத்துடனேயே சில அவநம்பிக்கைகளின் இருப்பை நான் கிளறி விடுகிறேன்.                           

இந்த ஊடகம் மூலம் தகவல் பெறுபவர்கள் (channelists ) வேறு வழிகளில் சோதித்துப் பார்க்க முடியக்கூடிய தகவல்களை ஏன் தர மாட்டேன் என்கிறார்கள் என்று என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன்.மாவீரன் அலெக்சாண்டர் தனது நடுகல் இருக்கும் சரியான இடத்தை ஏன் சொல்லவில்லை? பெர்மார்ட் தனது கடைசித்தேற்றம் பற்றி ஏன் பேசவில்லை ?.சான்வில்கிஸ் லிங்கனின் படுகொலை சதி  பற்றி ஏன் பேசவில்லை?ஹெர்மன் கோரிச் ஜெர்மன் பாராளுமன்றம் தீயிட்டுக் கொளுத்தப் பட்டது பற்றி ஏன் சொல்லவில்லை?சோபகிள்ஸ், டெமாக்ரட்டிஸ்,அரிஸ்டார்ச்சஸ் ஆகியோர் தமது கடைசி நூல் பற்றி ஏன் பேசவில்லை? தங்களது சிறந்த படைப்புகள் எதிர்கால சந்ததியினரைச் சென்றடைய வேண்டும் என அவர்கள் விரும்பவில்லையா?   
 
இறப்புக்குப் பின் உயிர் வாழ்தல் பற்றிய நல்ல சாட்சியம் ஒன்று வெளியிடப்பட்டால் அது பற்றி ஆய்வு செய்வதற்கு நான் ஆர்வத்தோடு இருக்கிறேன். ஆனால் அது வெறும் சம்பவம் என்பதாக இருக்கக்கூடாது.அறிவியல் பூர்வமான தரவு ஆக இருக்க வேண்டும். செவ்வாயில் தோன்றும் முகம்,மற்ற கிரகத்து மனிதர்களால் கடத்தப்படுவது என்பதனை எடுத்துக் கொண்டால் பருண்மையான உண்மைகள் மேலானதாக இருக்கும். நான் சொல்வது என்னவெனில் ஆறுதல் அளிக்கும் கற்பனைகளை
விட கசப்பான உண்மை மேலானது. இறுதி ஆய்வில் பெரும்பாலும் கற்பனைகளை விட உண்மையான தரவுகள் தான் மிகவும் வசதியாக இருக்கின்றன.


ஊடக வகையில் செய்திகளைப் பெறுதல் ஆவியுலகத் தொடர்பு மற்றும் இதர மாந்திரீகம் போன்றவற்றின் அடிப்படையான தர்க்கம் என்னவெனில் நாம் சாகும் போது முற்றாக மறைந்து போவதில்லை என்பதாகும். உண்மை அப்படி இல்லை. சில சிந்தனைகள் உண்ர்வுகள் நம்மை பற்றிய சில நினைவுகளில் ஒரு பகுதி தொடருகிறது என்பதாகும். ஒரு ஆன்மா அல்லது ஆவி என்பது பருப்பொருள் அல்ல. சக்தியும் அல்ல.
வேறு ஏதோவாக இருக்க முடியும். எதிர் காலத்தில் நாம் மனித உடல்களிலும் மற்ற உயிரினங்களின் உடலின் உள்ளும் நுழைய முடியும். எனவே இறப்பு என்பதன் வேதனையை மழுங்கடித்து விடும் என்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கும் மேலாக ஆவிஉலகம் அல்லது ஊடகங்கள் வாயிலாக செய்தி பரப்புதலின் வாதங்கள் உண்மையெனில் நம்மால் நேசிக்கப்பட்டு இறந்து போனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதான வாய்ப்பு நமக்கு இருக்கிறது.

3500 வயதான "ராம்தா" என்பவருடன் தான் தொடர்பு கொண்டிருப்பதாக வாக்ஷ¢ங்டன் மானிலத்தைச் சேர்ந்த சே.இசட்.நைட் என்பவர் சொல்கிறார். இந்த நைட் என்பவரின் நாக்கு உதடுகள் குரல் வளையைப் பயன்படுத்தி ராம்தா நன்றாக ஆங்கிலம் பேசுகிறாராம். அப்பொது வெளிவரும் பேச்சு இந்திய உச்சரிப்பு போலத் தோன்றுகிறதாம். பெரும்பாலான மனிதர்களுக்குப் பேசுவது எப்படி என்பது தெரியும்.குழந்தைகளில் இருந்து தொழில் முறை நடிகர்கள் வரை பல்வேறு விதமான குரல்களைத் தம் கை வசம் வைத்திருக்கின்றனர். இதன் எளிமையான கருதுகோள் என்னவாக இருக்கும் என்றால் திருமதி நைட் தன் மூலமாகவே ராம்தாவை
பேச வைக்கிறார் என்பதாகும்.அவருக்கு பனியுறை காலத்திய உடல் இழந்த உயிரிகளுடன் நேரடியாக எந்தத் தொடர்புகளும் இல்லை. அதற்கு மாறான சாட்சியங்கள் ஏதேனும் இருப்பின் அதனை நான் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். திருமதி நைட் அவர்களின் வாழ்மொழி உதவி இல்லாமல், ராம்தா தானே பேச முடிந்தால் அது மிகவும் பெரிய அளவில் உணர்வில் பதியும்.அப்படி இல்லாது போனால் நாம் எவ்வாறு இந்த விசயத்தை பரிசோதித்துப் பார்க்க முடியும்? (நடிகை ¦க்ஷர்லி மக்லீன் அட்லாந்திசில் ராம்தா தனது சகோதரனாக இருந்ததாக உறவு கொண்டாடுகிறார்.அது வேறு கதை).

ஒரு வேளை, நாம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக ராம்தா கிடைப்பாராயின்,தான் யாரென்று உரிமை கொண்டாடுகிறார் என்பதை நிரூபிக்க இயலுமா? 35000 ஆண்டுகளுக்கு முன்பே தான் வாழ்ந்தது தோராயமாகவேனும் அவருக்கு எவ்வாறு தெரிய வந்தது? காலத்தைப் பொறுத்தவரை அவர் எந்த நாட்டின் கணக்கீட்டு முறையைப் பின்பற்றுகிறார்? இடையில் கடந்து போன ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பற்றிய தகவல்களை யார் வைத்திருக்கிறார்கள்? எதற்கு முன்பு அல்லது எதற்குப் பின்பு 35000 ஆண்டுகள் என வைத்துக் கொள்வது ?.அந்தக் காலம் பற்றி ராம்தா ஏதாவது கண்டு பிடிப்பாரேயாகில் அவர் அவ்வளவு
வயதானவர் எனக்கொள்ளலாம். இல்லையெனில் அவனோ அவளோ போலி என்றாகிவிடும்.

ராம்தா எங்கே வசித்தார்? (அவர் இந்திய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுகிறார் என்பது சரியென்றால் 35000 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு தான் பேசினார்களா? ). அப்போதைய தட்ப வெப்ப நிலை எவ்வாறு இருந்தது? ராம்தா என்ன உணவு சாப்பிட்டார் ?. (தொல்பொருள் ஆய்வாளர்களுக்குத் தெரியும் அவ்வளவு காலதுக்கு முன்பு மக்கள் என்ன சாப்பிட்டார்கள் என்ற விவரம்.) அந்தப்பகுதியில் தோன்றிய மொழிகளும் சமூக அமைப்பும் என்னவாக இருந்தன? ராம்தா யாருடன் வசித்தார்?அவருக்கு மனைவி
மனைவிகள்,குழந்தைகள்,பேரக்குழந்தைகள் இருந்தார்களா? ஆயுள் சுழற்சி எப்படி இருந்தது? குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயுள் நீட்டிப்பு எவ்வாறு இருந்தது?அவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டு முறையைக் கடைப்பித்தார்களா? எந்த விதமான ஆடைகளை உடுத்தினார்கள்? துணி எவ்வாறு  தயாரிக்கப் பட்டது? அப்போதிருந்த வேட்டையாடி உண்ணும் பயங்கர மிருகங்கள் யாவை? மீன் பிடிக்கும் வேட்டையாடும் யுக்திகளும் சாதனங்களும் என்னவாக இருந்தன?ஆயுதங்களைப் பயன் படுத்தினார்களா? தொற்று நோய்கள்
இருந்தனவா?அயலவர்கள்மீதான அச்சம் இருந்ததா? இனக்குழுப் பற்று இருந்ததா? ராம்தா அட்லாண்டிசின் உயர்ந்த கலாச்சார மரபினில் வந்தவர் என்றால் அந்த கலாச்சாரத்தின் மொழி இயல் தொழிலியல் வரலாற்றியல் மற்றும் இதர விவரங்கள் என்னவாக இருந்தன?அவர்களது எழுத்துரு எவ்வாறு இருந்தது ? இவற்றை எல்லாம் எமக்குச் சொல்லுங்கள்.அதை விட்டுவிட்டு அற்பமான போதனைகள் தாமே வழங்கப்படுகின்றன.

மற்றொரு எடுத்துக்காட்டினைப் பார்ப்போம்.பழங்காலத்தில் இறந்து போன ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் தொகுதி அல்ல இது.ஆனால் இதழியளாளர் ஜிம்¦க்ஷனபெல் என்பவரால் மனிதர்கள் அல்லாத எதிர் பாராமல் தோன்றும் ,நம் உலகைச் சுற்றி வரும் உயிரிகளிடமிருந்து பதிவு செய்யப் பட்டவை.:

" பாவம் செய்யும் தேசம் எங்களைப் பற்றி பொய்களைப் பரப்புவது கண்டு நாங்கள் கவலைப் படுகிறோம் .நாங்கள் இயந்திரங்களில் இருந்து வரவில்லை,இயந்திரங்கள் மூலமாக பூமியில் இறங்கவில்லை.காற்றைப் போல நாங்கள் வந்தோம்.நாங்கள் உயிர்ச்சக்திகள்.தரையிலிருந்து வந்த உயிர்ச்சக்திகள்.இங்கே வாருங்கள்.மூச்சு விடும் தூரத்தில்தான் .........இலட்சக்கணக்கான மைல்களுக்கப்பால் அல்ல.உங்கள் உடலில் உள்ள சக்திகளை விடப் பெரிய உயிர்ச்சக்தி.ஆனால் வாழ்வின் உயர்ந்ததொரு மட்டத்தில் நாம் சந்திக்கிறோம்.எங்களுக்கென்று பெயர் ஏதும் இல்லை.உங்கள் உலகத்துக்கு இணையாகவே இருக்கிறோம்.உங்கள் உலகத்துக்குப் பக்கத்திலேயே இருக்கிறோம்.தடுப்புச் சுவர்கள் இடிக்கப் படுகின்றன. கடந்த காலத்திலிருந்து இரு மனிதர்கள் எழுந்து
வருகிறார்கள்.இனி பெருங்கரடி (துருவம்)உலகம் அமைதியில் வாழும். "

பண்டைக்கால மதங்களைப் போல இறப்புக்குப் பிந்தைய வாழ்வு பற்றியும்....ஏன் நித்திய வாழ்வு பற்றியும் கூட உறுதி மொழிகள் அளிக்கப்படுவதால் சிறுபிள்ளைத்தனமான அற்புதங்களுக்கு மக்கள் செவி சாய்க்கிறார்கள்.

ஜே.பி.எஸ் ஹால்தேன் என்னும் பிரித்தானிய அறிவியலாளர் நித்திய வாழ்வு பற்றிய ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்குகிறார்.அவர் ஆர்வம் செலுத்திய பல துறைகளுள் மக்கள்தொகையின் மரபீனித்துறையும் அடங்கும்  என்பதோடு அத்துறையின் முன்னோடிகளிலொருவர் ஆவார். மிகத் தொலைவானதொரு எதிர் காலத்தில் தாரகைகள் ஒளியிழந்து அண்டவெளி முழுதும் குளிர்ந்து ஒரு மெல்லிய வாயு படரும் என அவர் யூகித்தார்.இருந்த போதிலும்,நாம் நீண்ட காலம் காத்திருந்தால்
அந்த வாயுவின் அடர்த்தியின் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய புள்ளி விவரங்கள் கிடைக்கலாம்.நீண்டதொரு காலப்போக்கில் நமது பிரபஞ்சம் போன்ற ஒன்றை மறு படைப்பு செய்வதற்கு இந்த ஏற்றத்தாழ்வுகள் போதுமானதாக இருக்கும்.இந்தப் பிரபஞ்சம் அளவற்ற பழமை வாய்ந்தது எனின் அப்படிப்பட்ட மீளுருவாக்கங்கள் பலப்பலவாக இருக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, எண்ணற்ற பால் வெளிகள், தாரகைகள்,தாவரங்கள்,உயிரினங்கள்கொண்ட அளவற்ற பழமை வாய்ந்த இந்தப் பிரபஞ்சத்தில் உங்களோடும் உங்களை நேசித்தவர்களோடும் இதே போன்ற ஒரு பூமி தோன்றி உங்கள் அனைவரையும் இணைத்து வைக்கும்.என்னல் எனது பெற்றோர்களை சந்திக்க முடியும்.அவர்களுக்குத் தெரிந்திராத பேரக்குழந்தைகளை அறிமுகப் படுத்த முடியும்.இப்படி எல்லாம் ஒரு முறை மட்டும்தான் நிகழும் என்பதில்லை.அளவற்ற முறைகள் இவ்வாறு நிகழும்.

இருந்த போதிலும் மதங்கள் வழங்குவதைப் போன்ற ஆறுதல் அல்ல இது.இந்த நேரத்தில்,அதாவது நானும் எனது வாசகர்களும் பகிர்ந்து கொள்ளும் இந்த நேரத்தில்,என்ன நடந்தது என்பதை நம்மில் ஒருவராலும் நினைவு கூற முடியவில்லை என்றாலும்,உடலளவில் மீண்டும் எழுவது என்பது என் காதுகளில் மட்டுமாவது  முழுமையாக ஒலித்துக் கொண்டிருக்கும். .இந்த சிந்தனையில் அளவற்றது என்பதன்  பொருளை நான் குறைத்து மதிப்பிட்டு விட்டேன்.ஹால்தேனின் சித்தரிப்பின்படி பிரபஞ்சங்கள் இருக்கும்,உண்மையில் அவை எண்ணற்றதாக இருக்கும்.அவற்றின் முந்தைய பல சுழற்சிகள் பற்றிய நினைவுகளை நமது மூளை
முழுமையாக இருத்தி வைத்திருக்கும் இன்னும் இருப்பில் வர இருக்கின்ற எல்லா பிரபஞ்சங்களைப் பற்றிய நினைவுகளும்(இன்னும் என்பது ஒரு முறைதான் என்று பொருள்படாது,எண்ணற்ற முறை எனவாகும்.) இந்த சுழற்சியில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அத்தனையும் தாண்டி முன் செல்லும் துயரங்களாகவும் பயங்கரங்களாகவும் உறுதி செய்யப்படும்.திருப்தி என்பதோ நமதருகில் இருக்கிறது_அது மட்டுப்பட்டதாகஇருந்த போதிலும்.

நாம் எந்த மாதிரிப் பிரபஞ்சத்தில் வசிக்கிறோம்? காலப்போக்கில் பிரபஞ்சம் விரிவடைவதை மாற்றியமைக்கப் போதுமான அளவு பொருள்(Matter)இருக்கிறதா?வெற்றிடங்களில் எற்படும் மாற்றங்களின் குணாம்சம் எப்படி இருக்கிறது? என்ற பல குழப்பமான கேள்விகளுக்கு விடை அளிப்பதில்தான் ஹால்தேனின் ஆறுதல் வார்தைகள் நிலைநிற்க முடியும்.இறப்புக்குப்பின் உயிர் வாழும் ஆழ்ந்த விருப்பம் உள்ளவர்கள்;அண்ட கோளவியல்(cosmology),கதிரியக்க ஆற்றல் அலை வீச்சின் ஈர்ப்பு சக்தி,அடிப்படைத்துகள் அறிவியல் மற்றும் வரம்பு கடந்த கணிதம் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும் எனத்தோன்றுகிறது.

அலெக்சாந்த்ரியாவின் பண்டைய தேவாலயப் பாதிரியாரன கிளமண்ட்  என்பார் கிரேக்கர்கள் பற்றிய தனது விளக்க உறையில் (இது 00190 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது) பல தெய்வ வழிபாட்டுப் பண்டைய முறையின் நம்பிக்கைகளை வஞ்சப்புகழ்ச்சியாய் தோன்றும் விதத்தில் மறுதலித்தார்: "வளர்ந்த மனிதர்களை இத்தகைய கதைகளைக் கேட்க அனுமதிப்பதில் இருந்து நாம் விலகி நிற்கிறோம். தேம்பி அழுதால் கூட நமது குழந்தைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் புராணக்கதைகள் சொல்லும் பழக்கம் இல்லை."

நமது காலத்தில் கடுமை குறைந்த வறையறைகளை நாம் வைத்திருக்கிறோம்.சாந்தாக்ளாஸ்,ஈஸ்டர் பன்னி டூத்·பேரி போன்ற கதைகளை அவை உணர்ச்சிகரமாக இருக்கின்றன என்பதால் குழந்தைகளுக்குச் சொல்கிறோம்.ஆனாலும் அவர்கள் வளரும் முன்னரே தவறான கருத்துகளையும் அய்யங்களையும் போக்கி விடுகிறோம்.ஏன் இப்படிப் பின் வாங்குகிறோம்? ஏனெனில்,வயது வந்தவர்கள் என்ற நிலை வரும்போது,இந்த உலகம் எவ்வாறு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் தான்குழந்தைகளின்
நலன் அடங்கி இருக்கிறது.இன்னமும் சாண்டாக்லாஸ் பற்றி  நம்பும் வயது வந்தவர்கள் பற்றி காரணகாரியத்தோடு நாம் கவலைப் படுகிறோம்.

  சமயங்களை வலியுறுத்தும் தத்துவ வித்தகர் டேவிட் ஹ்யூம் எழுதினார்:

  "இத்தகைய விஷயங்களில் தங்கள் மனதில் எழும் அய்யங்கள் பற்றி தமது சொந்த மனசாட்சியுடன்
  கூட இசைந்து போக மனிதர்கள் துணிவதில்லை.கண் மூடித்தனமான நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கின்றனர்.
  தங்களது உண்மையான அவநம்பிக்கையை மறைத்து நேரடியான மத வெறியால் ஆணையிட்டுச் சொல்கின்றனர்."





Sunday 17 March 2013

ரிச்சர்ட் டாக்கின்ஸ் கட்டுரைகள்

மனத்தின் வைரஸ்கள்

ரிச்சர்ட் டாக்கின்ஸ்
 
 மீம்கள் தங்கி வசிக்கும் இடம் மனித மனம். ஆனால், மீம்கள் தாங்கள் வசிக்க வசதியாக கட்டிய ஒரு வாசஸ்தலமே மனித மனம் என்பதும். இவைகள் நுழையவும், வெளியேறவும் கட்டிய வழிகள் வசிக்கும் ஒவ்வொரு பிராந்திய சூழ்நிலைகளையும் பொறுத்தது. செயற்கையாகக் கட்டப்பட்ட கருவிகள் மூலம், ஒரே மாதிரியாகவும் வசதியாகவும் பிரதியெடுப்பதன் மூலம் இன்னும் வலிமையடைகிறது. சீனாவில் வாழும் சீனர்களது மனம், ஃப்ரான்ஸில் வாழும் ஃப்ரெஞ்சின் மனத்தை விட மாறுபட்டது. படித்தவர்களது மனம் படிக்காதவர்களது மனத்தை விட மாறுபட்டது. தாங்கள் வாழும் மனத்தின் சொந்தக்காரருக்கு இந்த மீம்கள் அளிக்கும் பயன்கள் ஏராளமானவை. அத்தோடு கூட சில ட்ரோஜன் குதிரைகளும் நல்ல எண்ணிக்கையில் வருகின்றன... டானியல் டென்னட்,  'தன்னுணர்வு விளக்கம் ' Consciousness Explained என்ற புத்தகத்தில் பிரதியெடுக்க ஒரு தீனி (Duplication Fodder) என் அருகில் நிற்கும் 6 வயதுக் குழந்தை, தாமஸ் என்ற பேசும் ரயில் வண்டி எஞ்சின் உண்மையிலேயே இருக்கிறது என்று நம்புகிறாள். கிரிஸ்மஸ் தாத்தா உயிருடன் இருப்பதாகவும் நம்புகிறாள், பெரியவளானதும் அவள் பல்லுக்கான தேவதையாகவும் விரும்புகிறாள். அவர்கள் மதிக்கும் வளர்ந்த பெரியவர்கள் சொல்லும் வார்த்தைகளை அவளும் அவளது  சினேகிதிகளும் நம்புகிறார்கள். நீங்கள் எது சொன்னாலும் நம்பும் வயது அந்தச் சிறு பெண்ணின் வயது. இளவரசர்களை தவளைகளாக மாற்றி விடும் சூனியக்காரிகளைப் பற்றிச் சொன்னாலும் அவர்கள் நம்புவார்கள். கெட்ட சிறுமிகளை நரகத்தில் நெருப்பில் சுடுவார்கள் என்று சொன்னால் அவளுக்கு இரவெல்லாம் தீக்கனவுகள் வரும். அப்படிப்பட்ட இந்த 6 வயதுச் சிறுமி தந்தையாரின் அனுமதியில்லாமல், வாராவாரம் ஒரு ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரியிடம் அறிவுரைகளைக் கேட்க அனுப்பப் படுகிறாள் என்பதை. நான் சமீபத்தில் தான் கண்டுபிடித்தேன். இவளுக்கு என்ன எதிர்கால வாய்ப்பு இருக்கிறது ?
 ஒரு மனிதக்குழந்தை தனது மக்களின் கலாச்சாரத்தை உறிஞ்சிக்கொள்ளுமாறு பரிணாமத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகவும் தெளிவாக, தங்களது மொழியின் அடிப்படைகளை சில மாதங்களிலேயே கற்றுக்கொள்கிறது.  ஒரு பெரிய அகராதி அளவுக்கு இருக்கும் வார்த்தைகளைப் உச்சரிக்கவும், ஒரு கலைக்களஞ்சியம் அளவுக்கு இருக்கும் விஷயங்களை பேசவும், கடினமான மொழியியல் வடிவமைப்புகளும், பெரியவர்களின் மூளையிலிருந்து இந்த இளம் மூளைக்கு மாற்றப்படுகிறது (அனுப்பபடுகிறது). மிகவும் உபயோகமான விஷயங்களை அதிக வேகத்தில் இறக்கிக்கொள்ள உங்களது மூளை வடிவமைக்கப்பட்டிருக்கும்போது, தவறான, ஆபத்தான விஷயங்களை அதே நேரத்தில் தடுப்பதும் கடினமானது. இத்தனை மன  'பைட் 'டுகள் இறக்கப்படும்போது, மன  'கோடான் 'கள் பிரதியெடுக்கப்படும்போது, குழந்தைகளின் மூளை ஏமாற்றப்படுவதற்கு எளிதானதாகவும், எதைச் சொன்னாலும் நம்புவதாகவும் இருப்பதில் ஆச்சரியமில்லை. இது மூனிகள், ஸயன்டாலஜி ஆட்கள், கத்தோலிக்க கன்யாஸ்திரிகள் போன்றோருக்கு எளிமையான பலிகடாவாக இருப்பதில் ஆச்சரியமில்லை. எதிர்ப்புச் சக்தியற்ற நோயாளிகள் போலவே, பெரியவர்கள் எளிதாக தூக்கி எறிந்துவிடும் விஷயத்திடமிருந்து கூட, குழந்தைகளால் தங்களைக் காத்துக்கொள்ள முடிவதில்லை.
டி என் ஏ விலும் ஒட்டுண்ணி கோடான்கள் இருக்கின்றன. நமது செல்லின் உள்ளே இருக்கும் அமைப்பு, டி என் ஏவை பிரதி எடுக்கும் வேலையில் வல்லமை படைத்தது. டி என் ஏவைப் பொறுத்த மட்டில், அது தன்னைப் பிரதிஎடுக்க எளிமையாகவும் அனுமதிக்கிறது. செல் நியூக்கிளியஸ் என்ற மையப்பகுதி மிகவும் நிபுணத்துவத்துடன், வேகமாகவும், துல்லியமாகவும் டி என் ஏவைப் பிரதிஎடுக்கும் அமைப்பைக் கொண்டுள்ளது.
 நமது உடலின் உள்ளே இருக்கும் செல் அமைப்பு டி என் ஏ பிரதி எடுப்பதில் மிகவும் ஆவலாக இருக்கின்ற படியால், நமது செல் டி என் ஏ ஒட்டுண்ணிகளுக்கும் வேலை செய்வதில் ஆச்சரியமில்லை. வைரஸ்கள், வைராய்ட்கள், பிளாஸ்மிட்கள், இன்னும் பல ஏமாற்றுவேலை பண்ணும் ஜெனடிக் பிரயாணிகளையும் நமது செல் பிரதி எடுத்துத் தள்ளுகிறது. ஒட்டுண்ணி டி என் ஏ அழகாக பிரிக்கப்பட்டு குரோமசோம்களாக உடைகிறது. இந்த ஒட்டுண்ணி குரோமசோம்கள் இன்னும் பலவாறாக பிரிந்து தங்களை பிரதியெடுத்துக்கொண்டே போகின்றன. அத்தோடு தங்களை நமது குரோமசோம்களோடு ஒட்டிக்கொண்டும் விடுகின்றன. ஆபத்தான ஆன்கோஜென் (oncogens) நமது உண்மையான ஜீன்களிடமிருந்து  வித்தியாசமே பார்க்கமுடியாதபடிக்கு இணைந்துவிடுகின்றன. பரிணாமத்தில் பார்த்தால், இவ்வாறு ஜீன்கள் உள்ளே வருவதும் வெளியே போவதும், நேரான ஜீன்கள் துரத்தப்படுவதும், வெளியே இருக்கும் துரத்தப்பட்ட  ஜீன்கள் உள்ளே வந்து நேரான ஜீன்களாக ஆவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது
 டிஎன் ஏ வெறும் டி என் ஏதான். ஒரு வைரஸ் டி என் ஏவுக்கும், உள்ளே இருக்கும் நேரான டி என் ஏவுக்கும் வித்தியாசம் அவை எப்படி அடுத்த தலைமுறைக்குச் செல்கின்றன என்பதை வைத்துத்தான். நேரான டி என் ஏ அடுத்த தலைமுறைக்கு, விந்து, முட்டை வழியாகச் செல்கிறது.  'துரத்தப்பட்ட ' டி என் ஏ, காயத்தில் வரும் ரத்தத்தில் ஒட்டிக்கொண்டோ, விழும் ஒரு தண்ணீர் துளி மூலமாகவோ குறுக்கு வழியில் நேரான டி என் ஏவுக்குள் புகுகிறது.
நமது கணினியில் உபயோகப்படுத்தும், செய்தித் தகட்டைப் பார்ப்போம். இதுவும், நமது செல் எப்படி டி என் ஏவை நகலெடுக்க ஆர்வமாக இருக்கிறதோ அது போல இதுவும் செய்திகளை நகலெடுக்க எளிமையாக இருக்கிறது. கணினிகளும், அதனுடன் கூட உபயோகப்படுத்தும் தகடுகளும், செய்தி நாடாக்களும், துல்லியத்தையும் சரியாக நகலெடுத்தலையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. டிஎன்ஏ மூலக்கூறுகள் போல, காந்த பைட்கள் பரிசுத்தமாக நகலெடுக்க  'வேண்டு 'வதில்லை. இருப்பினும், தன்னைத்தானே பிரதியெடுத்துக்கொள்ளும் ஒரு நிரலை (புரோகிராமை) நம்மால் எழுத முடியும். தன்னைத் தானே நகலெடுத்தலை மட்டுமல்ல, இன்னும் பல கணினிகளுக்கு பரவும் படிக்கும் அந்த நிரலை எழுத முடியும். கணினிகள் பைட்டுகளை நகலெடுப்பதில் துல்லியமானவையாக இருப்பதாலும், அந்த நிரலில் சொல்லப்பட்ட கட்டளைகளை துல்லியமாக நிறைவேற்றுவதில் சரியானவையாக இருப்பதாலும், தன்னைத்தானே நகலெடுத்து பரப்பும் நிரல்களுக்கு பலிகடாக்களாக உட்கார்ந்திருக்கின்றன.  'சுயநல ஜீன்கள் ' பற்றிப் படித்த எவரும், இந்த கணினி உலகத்தையும், அதில் இருக்கும் இணைப்புகளையும், தகடுகளையும், மின்னஞ்சல் இணைப்புகளையும் பார்த்துவிட்டு, எவ்வளவு எளிதாக பிரச்னையை உண்டுபண்ணலாம் என்று உடனே உணர்ந்து கொள்ளலாம். சமீபத்திய கணினி வைரஸ் பிரச்னைகளைப் பார்க்கும் போது அவை ஏன் இவ்வளவு தாமதமாக வந்தன என்பதுதான் ஆச்சரியம்.
 கணினி வைரஸ்கள்.
 நோய்களுக்கு ஒரு மாதிரி வடிவம் ( Computer Viruses: a Model for an Informational Epidemiology) ஏற்கெனவே இருக்கும் சரியான, சட்டரீதியான நிரல்களோடு ஒட்டிக்கொள்ளும் கணினிக் கட்டளைத் தொகுப்பையே கணினி வைரஸ்கள் என்று அழைக்கலாம். இவை இவ்வாறு ஒட்டிக்கொண்டு, அந்த நிரல் செய்யும் வேலையைத் தடுக்கவும், அல்லது மோசமான விளைவை ஏற்படுத்தவும் செய்கின்றன. இவை பரிமாறிக்கொள்ளப்படும் கணினித் தகடுகள் மூலமாகவும், இணைய இணைப்பு மூலமாகவும் பரவுகின்றன. இவைகளை தொழில் ரீதியில் புழுக்கள் (worms) இடமிருந்து பிரித்துப் பார்க்கலாம். புழுக்கள் முழு நிரல்கள். இவை இணையம் மூலமாக மட்டுமே பரவுகின்றன. இவைகள்  'டிரோஜன் குதிரைகள் ' நிரல்களிடமிருந்து வேறுபட்டவை. டிரோஜன் குதிரைகள் தானாக தன்னை பிரதியெடுக்கும் வேலையைச் செய்வதில்லை. இவைகள் மனிதர்களுக்கு கவர்ச்சியாக தோன்றும் விஷயங்களோடு (அழகான படங்கள், ஆவணங்கள் போன்றவையோடு) ஒட்டிக்கொண்டு அவர்களை பிரதியெடுக்க உபயோகப்படுத்திக்கொள்கின்றன.
 இதை உருவாக்கிய ஆசிரியர்களது முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இன்னும் பல விஷயங்களையும் இந்த கணினிக் கிருமிகள் செய்யலாம். இதன் பக்க விளைவுகள் நகைப்புக்கிடமாகவும் (மாக்கின்டோஷ் கணினியின் ஸ்பீக்கர்  'பயப்பட வேண்டாம் ' என்று சொல்லிவிட்டு அதற்கு நேர் எதிரான விளைவை கணினியில் ஏற்படுத்தும் வைரஸ்), தீங்கானதாகவும் (உங்களது வன் தகடு (hard disk) அழியப்போகிறது என்று திரையில் எச்சரித்துவிட்டு அழிக்கும் வைரஸ்), அரசியல் ரீதியானதாகவும் (பீகிங்கில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் பேசும் வைரஸ்களும், ஸ்பானிய தொலைபேசி நிறுவனம் அதிக பணம் பிடுங்குவதை எதிர்த்தும் வந்த வைரஸ்கள்), எதிர்பாராத விளைவுகள் (நிரல் எழுதிய நிரல் எழுத்தாளர் (புரோகிராமர்) அவ்வளவு திறமைவாய்ந்தவராக இல்லாததால் வரும் விளைவுகள்) போன்றவை. நவம்பர் 2 1988ஆம் நாள் அமெரிக்காவின் கணினிகளை நிறுத்திய வைரஸ் தீங்கு செய்ய வேண்டும் என்ற கருத்தில் எழுதப்படாமல் இருந்தாலும், கட்டுப்பாட்டுக்கடங்காமல் போய் 24 மணி நேரத்தில் 6000 கணினி ஞாபகங்களை அழித்து மிக வேகத்தில் பெருகியது ஒரு உதாரணம்.  'இன்று உலகத்தில் ஒளி வேகத்தில் மீம்கள் பரவுகின்றன. இவைகளை ஒப்பிட்டால், ஈஸ்ட் செல்களும், பழப்பூச்சிகளும் ஆமை வேகத்திலேயே பரவுகின்றன. மீம்கள் ஒரு வாகனத்திலிருந்து மறு வாகனத்துக்கு தாவுகின்றன, ஒரு வழியிலிருந்து மறு வழிக்கு தாவுகின்றன. இவைகளை தடுத்து நிறுத்துவது ஏறத்தாழ முடியாத விஷயம் ' (டென்னட் 1990, பக்கம் 131). வைரஸ்கள் வெறுமே மின்னணு சாதனங்களிலும், தகடுகளிலும், இணைய இணைப்புகளிலும் மட்டும் வாழ்பவை அல்ல.  ஒரு கணினியிலிருந்து மறு கணினிக்குச் செல்லும் வழியில் அவை பதிவு செய்யப்பட்ட காகிதத்திலிருந்து மனிதக் கண்ணுக்கும் பிறகு மூளைக்கும் சென்று பிறகு மனிதக் கைகள் மூலம் மீண்டும் கணினிக்குள்ளும் செல்லலாம். ஒரு கணினி நிபுணத்துவத்துக்கான பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட கணினி வைரஸின் நிரல் பலரால் வெகுவாக கண்டிக்கப்பட்டது. இவ்வாறு வைரஸ் கருத்து வெளிப்படுவது ஒருவித மோசமான மனநிலையைக்குறிக்கிறது. இவ்வாறு பிரசுரிப்பதும், எப்படி எழுதுவது என்று பரப்புவதும் பொறுப்பற்ற காரியமாக, சரியாகத்தான் பார்க்கப்படுகிறது.
 நான் வைரஸ் நிரலை பிரசுரிக்கப்போவதில்லை. ஆனால், நல்ல வைரஸ் வடிவமைப்புக்கு சில தந்திரங்கள் இருக்கின்றன. இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். இவைகளை இங்கே குறிப்பிடுவதில் எந்த விதமான ஆபத்தும் இல்லை. என்னுடைய கட்டுரையை மேலே கொண்டுசெல்ல இந்த குறிப்புகள் தேவை. இவை எல்லாமே வைரஸ் பரவும்போது, தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ளாமல் மறைத்துக்கொள்வதையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
 ஒரு கணினிக்குள் அதிவேகமாக தன்னைத்தானே பிரதியெடுக்கும் வைரஸ்கள் உடனே கண்டுபிடிக்கப்பட்டுவிடும். ஏனெனில் இவை உடனே தன்னுடைய இருப்பை கணினியின் ஞாபகத்தை அழிப்பதன் மூலம் வெளிக்காட்டி விடுகின்றன. ஆகவே இந்தக் காரணத்தால், பல வைரஸ் நிரல்கள் ஒரு கணினியை பாதிக்கும் முன்னர், தான் இங்கே முன்னமே இருக்கிறோமா என்று பரிசோதிக்கின்றன. (தடுப்பு மருந்து போல, இது ஒரு கணினியை பாதுகாக்கும் வழியையும் உருவாக்கித் தருகின்றன.) ஒரு வைரஸ் தடுப்பு மருந்து நிரல்கள் வியாபார ரீதியில் வெளிவருவதற்கு முன்னால், நானே என் கணினியை இது போல தடுப்பு மருந்து கொடுத்தேன். அந்த கணினி வைரஸை அழிக்காமல், அந்த வைரஸின் உள்ளே இருந்த கட்டளைகளை மட்டும் அழித்துவிட்டு, அந்த உருவத்தை விட்டு விட்டேன். அதன் பின்னர் என் கணினிக்குள் வந்த அதே வைரஸ்கள், தான் அங்கே முன்னமே இருப்பதைப் பார்த்துவிட்டு மறுபடி பாதிக்காமல் போயிருக்கலாம். இந்த தடுப்பு மருந்து உண்மையில் வேலை செய்ததா என்று எனக்குத் தெரியாது. அந்தக் காலத்தில் இது போல வைரஸின் உள்ளே இருக்கும் கட்டளைகளை எடுத்துவிட்டு உருவத்தை விட்டு விடுவது சரியானதாக இருந்தது. இந்தக்காலத்தில் இது போன்ற வேலைகளைச் செய்ய வியாபார ரீதியில் கிடைக்கும் வைரஸ் எதிர்ப்பு நிரல்களை ஓடவிடுவதே சரியானது. மிகவும் அதிவேகத்தில் பரவி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். எந்த வைரஸ் உடனுக்குடனே மிக மோசமாக கணினிகளை அழிக்கிறதோ, அந்த வைரஸ் அதிக கணினிகளுக்குப் பரவாது. ஒரு கணினியில் முழு டாக்டரேட் தீஸிஸையும் அழிக்கும் (அல்லது இன்னும் நகைப்புக்கிடமான வேறெதையாவது செய்யும்) வைரஸ், எல்லா கணினிகளுக்கும் பரவாது. ஆகவே, சில வைரஸ்கள் கண்டுபிடிக்க முடியாதது போல மிகச்சிறிய விளைவை ஏற்படுத்துவதாகவும், அதே நேரத்தில் மோசமான விளைவையும் ஏற்படுத்துபவையாகவும் வடிவமைக்கப்படுகின்றன. ஆகவே ஒரு வித வைரஸ், வன்தகடுகளை முழுவதுமாக அழிக்காமல், கணக்குப்போடும் படிவங்களை (spreadsheets) அழிக்கும் படிக்கு  (அல்லது அந்த படிவங்களில் சில இடங்களில் எண்களை மாற்றிப்போடுபவையாக ) இருக்கின்றன. மற்றும் சில வைரஸ்கள் திடார் திடாரென தாக்கும்படிக்கு, அல்லது எப்போதோ ஒரு முறை தாக்கும்படிக்கு அமைக்கப்படுகின்றன. உதாரணமாக ஒரு வைரஸ் 16 வன்தகடுகளை தாக்கினால், அதில் ஒன்றே ஒன்றை மட்டும் அழிக்கும்படிக்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில வைரஸ்கள் டைம்பாம் போல, ஒரு குறிப்பிட்ட தேதியில் மட்டும் வேலை செய்யும் படிக்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. (உதாரணமாக ஏப்ரல் முட்டாள் தினத்தில் அல்லது வெள்ளிக்கிழமை 13ஆம் தேதியன்று தாக்கும்படிக்கு).  ஒட்டுண்ணியின் நோக்கில், விளைவு எவ்வளவு மோசமானது என்பது முக்கியமில்லை. அந்த விளைவுக்கு முன்னர் எந்த அளவு பரவ முடிகிறது என்பதே முக்கியம்.  (இது சங்கடமான ஒரு ஒற்றுமையை மெடவார் வில்லியம்ஸ் தேற்றத்தோடு கொண்டிருக்கிறது. அதாவது நமது உடலில் இருக்கும் சில உயிருக்கு ஆபத்தான ஜீன்கள் முதிர்ச்சியடைய ஒரு குறிப்பிட்ட காலம் ஆகிறது என்பதும், அதனாலேயே நாம் வயது முதிர்வதால் இறக்கிறோம் என்றும் இந்த தேற்றம் கூறுகிறது (வில்லியம்ஸ் 1957)) இதனால், சில பெரிய நிறுவனங்கள் தங்களது கணினிக்கும்பலில் ஒரு சில கணினிகளை தனியாகப் பிரித்து அந்த கணினிகளுக்கு நேரத்தை ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ முன்னுக்கு நிறுத்தி வரப்போகும் ஆபத்தை முன்னமே உணர்வதற்கு அமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கின்றன.  மீண்டும், எதிர்ப்பார்க்கக்கூடியது போலவே, கணினி வைரஸ்கள் ஒரு ஆயுதப் பந்தயத்தை உருவாக்கி விட்டன. வைரஸ் எதிர்ப்பு நிரல்களும் மென்பொருளும் அட்டகாசமாக வியாபாரமாகின்றன. இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள் பலவித தடுப்பு மருந்து முறைகளைக் கையாள்கின்றன. சில ஒரு குறிப்பிட்ட வைரஸ் கும்பலுக்கு எதிரானதாக எழுதப்படுகின்றன. கணினியில் சில முக்கியமான ஞாபக இடங்களைப் பாதுகாத்து, உபயோகிப்பாளரை எச்சரிக்கின்றன.
இந்த வைரஸ் கருத்துருவாக்கத்தை,  தீங்கு விளைவிக்காத, நன்மை செய்யக்கூடிய விஷயத்துக்குக்கூட உபயோகப்படுத்தலாம். திம்ப்லி (1991)இல்  'உயிர்பொருள் ' (liveware) என்ற வார்த்தையை உருவாக்கினார். இந்த தொத்துநோய் கருத்தைப் பயன்படுத்தி ஒரு செய்தித்தளத்தை (database) பல பிரதிகள் எடுக்கவும், சரியானதாக இந்தப் பிரதிகளை வைக்கவும் பயன் படுத்தினார். ஒவ்வொருதடவையும் ஒரு தகட்டை ஒரு கணினியில் செருகும்போதும், செய்தித்தளம் அதில் இதே போல ஒரு பிரதி இருக்கிறதா என்று பார்க்கிறது. அப்படி ஒரு பிரதி இருந்தால், எது சமீபத்தியதோ அந்தப்பிரதி, தன்னையே பழைய பிரதி மீது எழுதுகிறது. இந்த செய்தித்தள முறை மூலம், ஒரு கல்லூரியில் இருக்கும் நண்பர்களிடம், யாரிடம் சமீபத்திய புத்தகத் தொகுப்பு இருக்கிறது என்பது கவலையில்லை. எப்போது ஒருவர் தன்னுடைய தகட்டை நண்பரின் கணினியில் செருகுகிறாரோ அப்போதெல்லாம் அவரது புத்தகத்தொகுப்பு செய்தித்தளம் மாறுபாடு அடைந்து சமீபத்தியதாக மாறுகிறது. திம்ப்லியின் உயிர்பொருள் சரியாகச் சொன்னால் வைரஸ் இல்லை. இது யாருடைய கணினிக்கும் சென்று அவரது கணினியில் தன்னைப் போட்டுவிடாது. ஏற்கெனவே தன்னைப்போல பிரதி இருக்கும் ஒரு கணினியை மட்டுமே அது பாதிக்கும். நீங்கள் கேட்டுக்கொண்டாலன்றி உங்களை இந்த உயிர்பொருள் பாதிக்காது.
 வைரஸ் பிரச்னையைப் பற்றிக் கவலைப்படும் திம்பில்பி, மற்றவர்கள் உபயோகிக்காத கணினி வகையறாக்களை உபயோகிப்பதன் மூலம் பாதுகாப்பு பெறலாம் என்று கூறுகிறார். பொதுவாக, எல்லோரும் உபயோகிக்கும் கணினி வகையை  நாம் உபயோகப்படுத்துவதன் காரணம் அது எல்லோரும் உபயோகிப்பது என்பதால்தான்.  விவரம் தெரிந்த எல்லோரும் சொல்வது என்னவென்றால், அவ்வாறு பொது உபயோகத்தில் இல்லாத சிறுபான்மை கணினி வகை பெரும்பான்மை கணினி வகையை விடச் சிறந்தது என்பதை. இருப்பினும்,  'எல்லோரிடமும் இருக்கிறது  'என்ற விஷயமே பயனுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.  'போதுமானது ' என்பது  'குணத்தை ' விட முக்கியமானதாகி விடுகிறது. எல்லோரிடமும் இருக்கும் மென்பொருள்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பதாலேயே எல்லோரிடமும் இருக்கும் வன்பொருளையும் வாங்குகிறார்கள் மனிதர்கள். பெரும்பான்மை வகை கணினிக்கு பல வகை மென்பொருள்கள் கிடைக்கும் என்ற காரணத்தாலேயே (நமக்கு அவை பிரயோசனமாக இருக்கிறதோ இல்லையோ) நாம் பெரும்பான்மை வகை கணினியை வாங்குகிறோம். ஆனால், இந்த வைரஸ் பிரச்னை காரணமாக, பிரயோசனம் மட்டுமே நமக்குக் கிடைப்பதில்லை. கூடவே பெரும்பான்மை வகை கணினிகளைப் பாதிக்கும் வைரஸ்களுக்கு நாம் பலிகடாவாக ஆகி விடுகிறோம். பெரும்பான்மை வகை கணினிகளை குறிவைத்து தாக்குவதால்,  நம் கணினிகளைத் தாக்கும் வைரஸ்களும் பெரும்பான்மையாகவே இருக்கின்றன. 
வைரஸ்களை நல்ல முறையில் உபயோகப்படுத்தும் விஷயத்துக்கு வருவோம். இந்த ஆலோசனைகள் எல்லாம்,  'முள்ளை முள்ளால் எடுப்பது, திருடனைவைத்து திருடனை பிடிப்பது போன்றவைகள். எளிய வழி, இன்றைய தடுப்பு மருந்து போடும் வைரஸ் எதிர்ப்பு நிரலையே ஒரு வைரஸ் போல வடிவமைத்து, இவைகளை இணைய வலை  மூலம் எல்லா கணினிகளுக்கும் அனுப்புவது. எந்த கணினி வைரஸ்களுக்கு எளிதான இலக்காக இருக்கிறதோ, அந்த கணினி இந்த வைரஸ் எதிர்ப்பு வைரஸ்உக்கும் எளிதான இலக்காக இருக்கும். இன்னும் கூர்மையான வைரஸ் எதிர்ப்பு நிரல், கற்றுக்கொள்ளும் படியும் வடிவமைக்கலாம்.  எப்போதெல்லாம் வைரஸ் வருகிறதோ அந்த புதுவைரஸை தானே அறிந்து செயலிழக்கச்ச் செய்யும் படிக்கும் இந்த நிரல்களை அமைக்கலாம்.
இந்த வைரஸ் கருத்துருவாக்கத்தை இன்னும் பல பயனுள்ள வழிகளாக (சற்று சுயநல வழிகளாக) நான் கற்பனை செய்யமுடியும்.  சந்தை ஆராய்ச்சி செய்யும் ஒரு நிறுவனம் தன்னுடைய பயனீட்டாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் எந்த மாதிரியான வடிவமைப்பை அவர்கள் விரும்புவார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் இந்த வைரஸ் கருத்துருவாக்கத்தைப் பயன்படுத்தலாம். மென்பொருளுக்கு வெறுமே பெயர் மட்டும் வைக்க விரும்புகிறார்களா அதனுடன் கூட படமும் இணைத்திருப்பதை விரும்புகிறார்களா ? எந்த அளவுக்கு கோப்புக்களை ஒன்றின் கீழ் ஒன்றாக வைக்கிறார்கள் ? ஒரு கோப்புக்குள் இன்னொரு கோப்பாக எவ்வளது தூரம் வைக்கிறார்கள் ? எந்த மென்பொருளை அடிக்கடி உபயோகப்படுத்துகிறார்கள் ? ஒரு மென்பொருளுக்கும் அடுத்த மென்பொருளுக்குமாக அடிக்கடி மாறி மாறி உபயோகப்படுத்துகிறார்களா ? நேராக தன்னுடைய எலியை தேவையான புள்ளிக்கு கொண்டு செல்கிறார்களா ? அல்லது தடவித்தடவி திரையெங்கும் சுற்றித்திரிந்து விட்டு குறியை அடைகிறார்களா ? இதனைசரிப்படுத்த நாம் வடிவமைப்பை மாற்ற வேண்டுமா ?
 ஒரு நிறுவனம் இந்தக்கேள்விகளுக்கான பதில்களை பெற ஒரு சர்வே காகிதம் எழுதி எல்லா பயனீட்டாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடம் பதில் பெறலாம். ஆனால் அவை மனச்சாய்வு பெற்றவையாக இருக்கும். மேலும் தவறானவையாகவும் இருக்கலாம். இதற்கு இதைவிட நல்ல முறை ஒரு கணினி நிரல்தான். பயனீட்டாளர்கள் தங்களது கணினியில் இந்த நிரலை சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் அது ஒரு ஓரமாக உட்கார்ந்திருக்கும் படி வடிவமைக்கலாம். பயனீட்டாளர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களா அவையெல்லாம் ஆராய்ந்து வருடக் கடைசியில் செய்தித்தொகுப்பை பயனீட்டாளரையே நிறுவனத்துக்கு அனுப்பும்படிக் கேட்டுக்கொள்ளலாம். இருப்பினும், பல பயனீட்டாளர்கள் இதற்காக ஒத்துழைக்க மாட்டார்கள். இதனை தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் இடையூராகப் பார்க்கவும் செய்யலாம்.
ஒரு நிறுவனத்தின் கண்ணோட்டத்தில், மிகச்சிறந்த தீர்வு வைரஸ்தான். எந்த ஒரு வைரஸைப் போலவும், இதுவும் தன்னைத் தானே பிரதி யெடுத்துக்கொள்ளவும், கணினியை அழிக்காமலும், தொடர்ந்து பரவும் படிக்கும் வடிவமைத்து, மேற்கண்ட வேலைகளைச் செய்யும்படி சொல்லலாம்.  எல்லா வைரஸ்களைப் போலவும் இதுவும் பரவும். மின்னஞ்சல் மூலமாகவும், தகடுகள் மூலமாகவும் பரவும் இந்த வைரஸ் போகும் இடமெல்லாம் தங்கி அங்கு பயனீட்டாளர் எவ்வாறு தனது கணினியை உபயோகிக்கிறார் என்று ஆராய்ந்து அந்த செய்தியைச் சேகரித்து மீண்டும் அடுத்த கணினி தாண்டி அங்கும் சேகரித்து இறுதியில் தான் ஆரம்பித்த நிறுவனத்தின் கணினிக்கே வந்து சேரும். அங்கு இந்த செய்தியை பிரித்து ஆராய்ந்து தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
 எதிர்காலத்தில், இந்த நல்ல வைரஸ்கள், கெட்ட வைரஸ்கள், சட்டரீதியான நிரல்கள், சட்டத்துக்குள் வராத நிரல்கள் எல்லாம் இணைந்து ஒரு ஸிலிகோஸ்ஃபியர் என்ற சூன்யவெளியின் சுற்றுச்சூழலில் வாழ்வதை கற்பனை செய்யலாம். இன்றைக்கு ஒரு மென்பொருள்  'ஸிஸ்டம் 7 உடன் ஒத்துப் போகக்கூடியது ' என்று அறிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில், ஒரு மென்பொருள்  '1998இன் உலக வைரஸ் கணக்கெடுப்பின் படி கண்டறியப்பட்ட வைரஸ்களுடன் ஒத்துப் போகக்கூடியது ' என்று அறிவிக்கப்படலாம். சில ஆவண உருவாக்க மென்பொருள்கள் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு அங்கிருக்கும் சில வைரஸ்களை இணையத்துக்குள் சென்று தேடி செய்து தரும்படிக்கு கேட்டுக்கொள்ளலாம். அதையும் தாண்டி ஒரு எதிர்காலத்தை பார்த்தால், ஒன்றிணைக்கப்பட்ட மென்பொருள் அமைப்புகள் வளரலாம். முன்வடிவமைப்புடன் அல்லாது, தானாக வளரும் (ஒரு பூமத்திய ரேகை மழைக்காட்டு சுற்றுச்சூழல் போல) ஒரு வைரஸ்கள், மென்பொருள்கள்  நிறைந்த சமூகமாக வளரலாம். எப்படி ஜினோம்களை தங்களுடன் ஒத்துப்போகும் ஜீன்களின் கூட்டமாகப் பார்க்கலாமோ அதுபோல உண்மையிலேயே, நமது ஜினோம்களை பெரிய வைரஸ் குழுமங்களாகப் பார்க்கலாம் என்று எழுதியிருக்கிறேன்
 ஜீன்கள் அத்தோடு இருக்கும் மற்ற ஜீன்களோடு ஒத்துப் போவதன் காரணம், அவ்வாறு ஒத்துபோவாத ஜீன்கூட்டங்கள் (அந்த ஜீன் கூட்டங்கள் இருந்த உயிர்கள்) பரிணாமத்தால் (இயற்கைத் தேர்வால்) அழிக்கப்பட்டதால்தான். தனக்குள் ஒத்துபோகும் ஜீன்கள் இருக்கும் ஜீன் குழுமங்கள் தனித்தனியான முறையில் தனித்தனியான கூட்டமைப்பில் தனியாக பரிணமிக்கலாம். என்னால் இன்னொன்றையும் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில், கணினி வைரஸ்கள் மற்ற கணினி வைரஸ்களோடு ஒத்துப்போகுமாறு பரிணாமம் அடையலாம். இந்த வைரஸ் குழுமங்கள் ஒரு சமூகத்தையும் அல்லது கும்பலையும் உருவாக்கலாம். அப்படி உருவாகாமலும் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும், இந்தக்கற்பனை பயங்கரமானதாகவே இருக்கிறது.
 இந்த நிகழ்காலத்தில், கணினி வைரஸ்கள் பரிணாமங்கள் அடைவதில்லை. இவை ஒரு மனித கணினி நிரல் எழுதுபவர்களால் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவை பரிணமிக்கின்றன என்று பலவீனமாகச் சொல்லவேண்டுமென்றால், ஒரு காரும் ஒரு விமானமும் பரிணமிப்பதுபோல என்று சொல்லலாம். வடிவமைப்பாளர்கள் சென்ற வருடக் காரைவிட சில இடங்களில் அங்கும் இங்கும் மாற்றி இந்த வருடக்காரை உருவாக்குகிறார்கள். இது சென்ற வருடத்தில் செய்ததையே இன்னும் கொஞ்சம் செய்வது என்று தான் (அதாவது இன்னும் கொஞ்சம் பின்பக்கத்தை கீழே இறக்குவது, காரின் முன் இருக்கும் ரேடியேட்டரை இன்னும் கொஞ்சம் பெரிதாக்குவது போல. ஆனால் வைரஸ் எழுதும் நிரல் எழுத்தாளர்கள் (புரோகிராமர்கள்) தடுப்பு மருந்து போடும் நிரல் வடிவமைப்பாளர்களை ஏமாற்ற, அவர்களை திணரடிக்க இன்னும் தீவிரமாக யோசித்து புதிய முறைகளில் வைரஸை உருவாக்குகிறார்கள். ஆனால் (இதுவரை) கணினி வைரஸ்கள் தானாக மாறுபட்டு (mutate) இயற்கைத் தேர்வில் பரிணாமம் அடைவதில்லை. எதிர்காலத்தில் நடக்கலாம். அவை தானாக மாறினாலும், அவை ஒரு நிரல் வடிவமைப்பாளரால் மாற்றப்பட்டாலும், அவற்றின் நடத்தையில் அதிக வித்தியாசம் வரப்போவதில்லை. எப்படி பரிணமித்தாலும், அவை மறைந்துவாழ்வதில் சிறப்பானதாகவும், மற்ற வைரஸ்களோடு ஒத்துபோவதாகவும், கணினி சமூகத்திற்குள் வளமையாக வாழ்வதையும் குறித்து முன்னேறுகிறது.
 டி என் ஏ வைரஸ்களும், கணினி வைரஸ்களும் பரவுவதற்கு ஒரே காரணம்தான். ஒரு சுற்றுச்சூழல் இருக்கிறது. அந்த சுற்றுச்சூழலில் இவை பிரதி எடுத்துக்கொள்வதற்கும், அந்த வைரஸ்கள் சொல்லும் கட்டளைகளைக் கேட்பதற்கு தகுந்த சூழ்நிலையும் இருப்பதே அந்தக் காரணம். இந்த இரண்டு சுற்றுச்சூழல்கள், 1) மூலக்கூறு உயிரியல், 2) கணினிகளும், செய்தி பரிமாற்றம் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும் இயந்திரங்களும். இது போன்ற வேறெதாவது சூழ்நிலை, பிரதி எடுக்கவும், செய்தி பரிமாற்றத்துக்கும் ஏதுவானதாக இருக்கிறதா ?

இவரை பற்றியான மேலதிக தகவல்களுக்கு நண்பர் பிரபஞ்சப்ரியனின் பதிவை  இங்கும்  மற்றும் அய்யா தருமி அவர்களுடைய பதிவை  இங்கும்அவர்களுடைய பக்கத்தில் காணலாம்

ரிச்சர்ட் டாக்கின்ஸ் கட்டுரைகள்

நண்பர்களே இதுதான் என் முதல் பதிப்பு,பதிவிரக்கம்தான் விரைவில் எழுத தொடங்குவேன்

அறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது

ரிச்சர்ட் டாக்கின்ஸ்


 கீழ்க்கண்ட கட்டுரை, ஃப்ரீ என்கொயரி பத்திரிக்கை, வால்யூம் 18, எண் 2 இல் வெளியானது. வெகுகாலமாக இருந்துவரும் மதங்களை எதிர் கொள்ளும்போது மட்டும் (ஸயண்டாலஜி, மூனிஸம் போன்ற இளைய மதங்களை எதிர்கொள்ளும்போது வராத  கோழைத்தனம், மற்ற நேரங்களில் பகுத்தறிவுடன் செய்லபடும்  மனிதர்களின் மூளையை மழுங்கடித்துவிடுகிறது.  ஸ்டாஃபன் ஜே கோல்ட் (Steven Jay Gould) தன்னுடைய கட்டுரையில், பரிணாமம் பற்றிய போப்பாண்டவரின் அணுகுமுறையை பாராட்டி, இது மத நம்பிக்கையாளர்களுக்கும், மத நம்பிக்கையற்றவர்களுக்கும் இடையே ஒரு இணக்கச் சிந்தனையை பிரதிபலிக்கிறது என்று எழுதுகிறார். (சமீபத்தில் போப்பாண்டவர் பரிணாமச் சிந்தனையை , கடவுள் உலகைப் படைத்தார் என்ற சிந்தனைக்கு விரோதமாய்ப் பார்க்க வேண்டியதில்லை என்று கருத்துத் தெரிவித்தார். மொ பெ.)  'அறிவியலும் மதமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, அவைகளது போதனைகள் வெவ்வேறு பகுதிகளை ஆக்கிரமிக்கின்றன. நான், என் இதய பூர்வமாய், நான் நேசிக்கும்  இணக்க ஆவணம் (Concordat - இது கிருஸ்தவ மதத் தலைவர்கள் அவ்வப்போது அளிக்கும் இறையியல் ஆவணம்.) மீது நம்பிக்கை வைக்கிறேன்.. ' 
சரி, இந்த தனித்தனி வித்தியாசமான பகுதிகள் என்ன ? இந்த ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்காத தனிப்பிரதேசங்கள் என்ன ? இவை இரண்டையும், மரியாதை செலுத்தும், அன்பு வாய்ந்த கான்கார்டெட்டில் இணைப்பது எவ்வாறு ? கோல்ட் சொல்கிறார்,  'அறிவியல் எண்களின் அடிப்படையிலான அகிலத்தைப் பற்றி பேசுகிறது. இந்த அகிலம் எதனால் கட்டப்பட்டிருக்கிறது என்பதையும் (பெளதீக உண்மை), எப்படி இவ்வாறு வேலை செய்கிறது என்பதையும் (தேற்றம்) பற்றி அறிவியல் பேசுகிறது. இந்த உலகத்தின் ஒழுக்க ரீதியான அர்த்தம், இதன் மதிப்பு ஆகியவை பற்றிய கேள்விகளில் மதம் இருக்கிறது...
இப்படி தீர்மானமாகப் பிரிக்க முடிந்திருந்தால் நல்லது தான்.  நான் போப்பாண்டவர் பரிணாமம் பற்றி என்ன சொன்னார் என்பதையும், அவரது திருச்சபை உண்மையெனக் கோரும் பல விஷயங்கள் உண்மையிலேயே அறிவியலிலிருந்து வேறுபட்டவையா என்பதையும் பின்னால் பார்ப்போம். முதலில், ஒழுக்கவியல் கேள்விகளுக்கு நமக்குப் பதில் அளிக்கவல்ல சிறப்பான தகுதி  மதத்திற்கு இருக்கிறதா என்று  சுருக்கமாக பேசுவோம். இப்படி தகுதி இருப்பதாக, மதச் சார்பற்றவர்கள் கூட , நாகரீகம் கருதி , ஒரு சலுகை அளிப்பதைப் போல, எதிரிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்  - அந்த வாய்ப்பு மதத்திற்கு அளிப்பதற்கான அடிப்படை மிகப் பலவீனமானது எனினும்- ஒப்புக் கொள்கிறார்கள்.
  'எது சரி, எது தவறு ? ' என்பது உண்மையிலேயே கடினமான கேள்வி. நிச்சயம் அறிவியல் அதற்குப் பதில் சொல்ல முடியாது. ஒரு ஒழுக்க ரீதியான அடிப்படையைக் கொண்டு,  முக்கியமான விலாவாரியான ஒரு ஆராய்ச்சி அமைப்பாக மதச்சார்பற்ற ஒழுக்கவியல் தத்துவத்தைக் கொண்டு ஆய்வு செய்யலாம்.  அறிவியற்பூர்வமான, மற்றும் பகுத்தறிவுக்கு ஒத்துப்போகும் சிந்தனையோடு , சரி- தவறு பாகுபாட்டின் பின்னால் இருக்கும் நம்பிக்கைகளில் , ஒன்றுக்கொன்று முரணாக இருக்கக்கூடிய விஷயங்களை ஆராயலாம். ஆனால், நிரந்தரமான கறாரான ஒழுக்கவியல் அடிப்படைகள் வெளியேயிருந்துதான் வரவேண்டும். அதுவும் விவாதிக்க முடியாத கொள்கையின் அடிப்படையிலிருந்துதான் வரவேண்டும். அல்லது, மதத்திடமிருந்து வரலாம் என நம்பிக்கை கொள்ளலாம். அதாவது ஒரு அதிகாரம், பாரம்பரியம், புனிதப்புத்தகம், அசரீரி, கடவுளின் குரல் ஆகியவைகளின் இணைப்பிலிருந்து வரலாம்.
துரதிர்ஷ்டவசமாக, மதம் என்பது நமக்கு ஒரு அடித்தளக் கல்போல இருக்கும் என்ற நம்பிக்கையும், நாம் அதனைச் சார்ந்து ஒழுக்கங்களை பெறலாம் என்ற நம்பிக்கையும் கானல் நீராகி விட்டது. நடைமுறையில், எந்த ஒரு பகுத்தறிவுள்ளவனும், புனிதப்புத்தகத்தை ஒழுக்கவியல் காரணகாரியத்துக்கு ஒரு கேள்விக்காளாகாத ஆதாரமாக உபயோகப்படுத்துவதில்லை. பதிலாக, நாம் புனிதப்புத்தகத்திலிருந்து அங்கு ஒரு துண்டமும், இங்கு ஒரு மேற்கோளுமாக (ஏசுவின் மலைப் பிரசங்கம் போல) உபயோகப்படுத்திக்கொண்டு, மற்ற அசிங்கமான உபதேசங்களை (திருமணத்துக்கு வெளியே உறவு கொள்பவளைக் கல்லாடித்துக் கொல்வது, கடவுளை மறுதலிக்கிறவனுக்கு மரணதண்டனை வழங்குவது, குற்றவாளிகளின் பேரப்பிள்ளைகளுக்கு தண்டனை தருவது போன்றவை) சந்தோஷமாக உதாசீனம் செய்துவிடுகிறோம். பழைய ஏற்பாட்டின் கடவுளின், பழிவாங்கும் குணம் கொண்ட பொறாமைத்தனத்தையும், இனவெறியையும், பெண்களை கேவலமாக நடத்துவதும், பயமுறுத்தக்கூடிய ரத்தவெறியையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், நமக்குப் பின்பற்றத்தக்க ஒரு முன்மாதிரியாக, நானோ, நீங்களோ, நமக்கு அறிமுகமுள்ள யாருமோ எடுத்துக்கொண்டதில்லை.  முந்தைய யுகத்தின் ஒரு பழக்கவழக்கங்களை, இன்றைய காலத்தின் தரத்தின் படி எடைபோடுவது சரியில்லை என்பதும் உண்மை தான். ஆனால், அதே தான் நான் சொல்லவிரும்பும் முக்கியமான விஷயம். ஆகவே, நாம் இன்னொரு ஒழுக்கரீதியான அடிப்படைகளை, நமக்குத் தேவைப்படும்போது, புனிதப்புத்தகங்களைப் புறமொதுக்கித் தான் , வேறு விதங்களில், பெறுகிறோம்.  <p> <p> இந்த இன்னொரு ஆதாரம், நம் தாராளவாத பொது நோக்கும், நாகரீகமும், இயற்கையான நீதியும், வரலாற்றின் முழுவதும், மதச்சார்பற்ற சீர்திருத்தக்காரர்களால் தூக்கிப்பிடிக்கப்பட்ட ஒன்று. உண்மைதான். இது கல்போல உறுதியான அடித்தளம் அல்ல. ஆனால், நடைமுறையில், நம்மில் மதச்சார்புள்ளவர்கள் உட்பட, இதைத்தான் தங்கள் புனிதப்புத்தகங்களைவிட உயர்வாக மதிக்கிறார்கள். நடைமுறையில் நாம் ஏறத்தாழ புனிதப்புத்தகங்களை உதாசீனம் செய்துவிடுகிறோம். நம்முடைய தாராளவாதப் பொதுச் சிந்தனைகளுக்கு எது உபயோகமாக இருக்கிறதோ, அதற்கு தகுந்தாற்போன்ற புனிதப்புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறோம். நமக்கு வசதிப்படாத மேற்கோள்களை செளகரியமாக மறந்துவிடுகிறோம். இந்த தாராளவாத பொதுசிந்தனை எங்கிருந்து வந்திருந்தாலும், நாம் மதச்சார்புள்ளவர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நமக்குப் பொருந்தி வருவது.

 அதே போல, பெரும் மத போதகர்களான ஏசு, கெளதம புத்தர் போன்றவர்கள் நம்மைப் பெரும் செயலுக்குத் தூண்டுகிறார்கள். உதாரண புருஷர்களாய் தம்முடைய ஒழுக்க நெறியின் காரணமாய் நமக்கு ஆதர்சமாகிறார்கள். ஆனால் மதத்தலைவர்களின் நடுவிலும் , ஜிம் ஜோன்ஸ், சார்லஸ் மான்சன் போன்ற கொடூரர்கள் உண்டு. அவர்களைத் தவிர்த்து மதச்சார்பற்ற உதாரண புருஷர்களான ஜவகர்லால் நேரு, நெல்சன் மண்டேலாவைப் பின்பற்றலாம். பழங்கால மரபுகளில் எது நல்லது எது கெட்டது என்று காண்பதற்கு நம் அறிவைப் பயன்படுத்துகிறோம்.
 அறிவியலின் களத்தில் நுழையும் மதம் ஒழுக்க நெறிகள் பற்றிய இந்த விவாதம் நம் விவாத மையத்திற்கு வெளியே இருப்பது. என் இப்போதைய முக்கிய விஷயத்திற்கு வருகிறேன் : விஞ்ஞான வெளியில் கால் பதிக்காமல் போப் இருக்கிறாரா என்பது கேள்வி.'போப்-களின் அறிவியல் அகதமியின் வளர்ச்சி ' பற்றிய அவர் உரை முந்திய போப்பான  'பனிரெண்டாம் பயஸ் ' தயக்கத்துடன் பரிணாமத்தை ஒப்புக் கொள்வது பற்றிப் பேசுகிறார். இதன் பின்பு விஞ்ஞான ஆதாரங்களை, கடவுளின் வாக்குடன் சரிநிகர் நிறுத்தக் கடின முயற்சியை மேற்கொள்கிறார். விவிலியத்தின் அசரீரிகள் கடவுளைப் போன்ற வடிவில் மனிதன் படைக்கப் பட்டான் என்று சொல்கின்றன. . மனித உடல் முன்பே இருந்த உயிருள்ள ஒரு பொருளை அடிப்படையாய்க் கொண்டுள்ளதெனில், ஆன்மாவோ கடவுளால் உடனடியாய் உருவாக்கப் படுகிறது. . இதன் தொடர்ச்சியாய் , பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் படி, வாழும் உயிரிகளிலிருந்து உருப்பெறும் , மனம் என்பது உடலென்ற பெளதீகப் பொருளின் அடிப்படையாகவும், அழியக் கூடிய பொருளான உடலின் தொடர்ச்சியாய்க் காணப் படுகிறது..இது மனிதன் பற்றிய உண்மைக்குப் புறம்பானது.. மனிதனைப் பொறுத்தவரை ஒரு இருத்தலியல் பாய்ச்சலைக் காண்கிறோம் என்று சொல்லலாம்- இது போபின் கூற்று.
போப்பிற்கு ஒரு பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். தான் சமரசப் படுத்த முயலும் இரண்டு  விஷயங்களின்முரண்பாட்டை உணரத்தான் செய்கிறார்.:  ' இந்தத் தொடராத் தன்மை ( அதாவது ஆன்மா-உடல் தொடராத் தன்மை, உடலின் தொடர்ந்த பரிணாமம் ஆதாரங்களுடன் தெரிவது, ஆன்மாவின் பரிணாமம் பற்றி எதுவும் சொல்ல முடியாத ஒருதன்மை - மொ பெ) பெளதீகத் தொடர்த்தன்மைக்கு முற்றிலும் முரண்பட்டதாய்த் தோன்றுகிறது.  பயப்பட வேண்டாம். கடந்தகாலத்தில் குழப்பங்களைத் தெளித்தது போலவே , இப்போதும் செய்கிறார்:
'பல விஞ்ஞானத் துறைகளில் கொண்டுள்ள முறைமைகளைப் பயன்படுத்தி இந்த முரண்பாட்டைச் சமன் செய்யமுடியும். காட்சி விவரண ஆதாரங்கள் பல முறைகள் பரிணாமத்தின் உடல் ரீதியான வளர்ச்சியை துல்லியாமாக விளக்கியுள்ளன. எந்தக் காலகட்டத்தில் எப்படிப்பட்ட படிநிலை ஏற்பட்டது என்பதும் துல்லியமாய் விளக்கியுள்ளன. இது போன்ற ஆதாரத்தை, ஆன்மா குறித்து கறாரான முறையில் கோர முடியாது எனினும், சோதனை முயற்சியின் மூலம், ஒரு குறிப்பிட்ட மனிதனின் குறிப்பிட்ட குணாம்சங்களைக் காண முடியும். - இது போபின் கூற்று அதாவது, மனிதனுக்கு முனிபிருந்த பரிணாம வளர்ச்சியின் ஒரு பை நிலையில் கடவுள் திடாரென்று குறுக்கீடு செய்து, ஆன்மாவை அவனுக்குள் செலுத்தினார் என்பது போப்பின் கூற்று. (எப்போது பத்து லட்சம் வருடங்கள் முன்பா ? இருபது லட்சம் வருடங்கள் முன்பா ? ) இப்படி திடாரென்று கடவுள் ஆன்மாவை அவனுக்குள் செலுத்தினார் என்ற இந்தப் பார்வை இல்லையென்றால், கத்தோலிக்க ஒழுக்கம் வலியுறுத்த வேறு வழியே இல்லையே. மிருகங்களை உணவுக்காகக் கொல்வது தவறில்லை, ஆனால் கருக்கலைப்போ, மருத்துவர்கள் கருணை கருதி பெருநோயாளிகளைத் தம் உயிரை முடித்துக்கொள்ள அனுமதிப்பது பாவம் . ஏனென்றால் மனித உயிர் சம்பந்தமான விஷயம் இது.
 கத்தோலிக்க மதத்தில்  'வலை ' ஒழுக்கம் பற்றியது மட்டுமல்ல, இப்படி விஞ்ஞானம் என்று சொல்லிக் கொள்வதும் வேண்டும். மனிதருக்கும், மற்ற உயிரினங்களுக்கும் இப்படியொரு பெரும் அகழியை வலியுறுத்துவது. இந்த அகழி, பரிணாமத் தத்துவத்திற்கு முரணானது. திடாரென்று ஆன்மாவை மனிதனுக்குள் கடவுள் செலுத்தினார் என்ற பார்வை, பரிணாமத் தத்துவத்துக்கு எதிரானது.
 கோல்ட் போன்றவர்கள் சொல்வது போல், மதம் விஞ்ஞானத்திலிருந்து தன்னை விலக்கிவைத்துக்கொண்டு, வெறும் ஒழுக்க நெறிகளைத் தான் போதிக்கிறது என்பதும் சரியல்ல. அறிவுக்கெட்டாத ஒரு கடவுள் உள்ள பிரபஞ்சம், இதிலிருந்து வேறுபட்ட பிரபஞ்சத்திலிருந்து முற்றிலும் மாறியிருக்கும். இது அறிவியல் பூர்வமான வேறுபாடே தான். கடவுள் இருக்கிறார் என்ற மதக் கோட்பாடே ஒரு விஞ்ஞானக் கோட்பாடு தான்.
 ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் முக்கிய ஆவணங்களும் கூட இந்தப் பிரசினையைக் கொண்டவையே. கன்னி மேரியின் கர்ப்பம், மேரி உடலோடு நேராய்ச் சொர்க்கம் புகுவது, ஏசுவின் உயிர்த்தெழுதல், நம் ஆன்மாக்கள் நம் இறப்புக்குப் பின்பு இருக்கிற கோட்பாடு - இந்தக் கோட்பாடெல்லாம் நிச்சயம் அறிவியல் கோட்பாடுகளே. இது வெறும் ஒழுக்க நெறி பற்றியதோ, விழுமியங்கள் பற்றிய கோட்பாடோ அல்ல. இது  'உண்மைகளின் ' பாற்பட்ட கோட்பாடு. இதற்கு பதில் சொல்ல ஆதாரங்கள் இல்லையெனினும், இவை அறிவியல் கருதுகோள்களே. இதற்கு ஏதும் ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் திருச்சபை வரிந்து கட்டிக் கொண்டு ஆதாரங்களைப் பரப்பி ஸ்தாபிக்கும் என்பதும் நிச்சயம்.
 மேரியின் உடல் இறந்தபின்னர், மற்ற உடல்கள் போலவே வீணாகியிருக்க வேண்டும், அல்லது நேராக சொர்க்கம் ஏகியிருக்க வேண்டும். 1950 வாக்கில் திருச்சபை வெளியிட்ட அறிவிக்கையில் மேரி நேராக உடலுடன் சொர்க்கத்தில் புகுந்தார் என்று சொல்லப் படுகிறது. எனில், சொர்க்கமும் பெளதீக தளத்தில் இருக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது ? உடலுடன் சொர்க்கம் போன விஷயம் பொய்யென்று நான் எண்ணினாலும், நான் சொல்லவருவது அதல்ல. இந்தக் கோரிக்கை விஞ்ஞான தளத்தில் உள்ளது தான் என்பது என் வாதம். ஆன்மா இறப்புக்குப் பின்பும் இருக்கும் என்ற வாதமும், தேவதைகள் வந்து மனிதர்களுக்கு உதவும் செய்திகளும், மேரி காட்சி கொடுக்கும் செய்திகளும், அற்புதங்கள் எல்லாமே, விஞ்ஞான தளத்திலான விஷயங்களே.
 எல்லா மதக் கோட்பாடுகளும், விஞ்ஞானத்திற்கு வெளியே உள்ளன என்ற வாதமே, ஒரு விதத்தில் இதுபற்றி விவாதங்களைத் தவிர்ப்பதற்காக ஏற்பட்டவை. அற்புதங்கள், மரணத்துக்குப் பிறகு சொர்கக்ம் போன்ற வாதங்களைப் பயன் படுத்தி எளியமக்களைக் கவர்ந்து, மதம் மாற்றி, மதத்தில் ஆட்களை அதிகரிப்பது ஒரு புறம். இவற்றின் விஞ்ஞானத் தோற்றமே மக்களைக் கவரவல்லது என்பது முக்கியமான விஷயம். ஆனால், கூடவே, மதத்தின் அடிப்படைகள் விஞ்ஞானத்திற்கு வெளியே இயங்குகின்றன அதனால் அதைக் கோள்வி கேட்கக் கூடாது என்பது இன்னொரு புறம். இவர்கள் இரண்டு விதமாகவும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் தப்பித்துப் போய் விடுகிறார்கள் . இதை அனுமதிக்கலாகாது.  போப்  'அடிப்படைவாதக் கருத்தான கடவுளே சகலமும் உருவாக்கினார் ' என்ற போக்கிற்கு எதிராக இருப்பது, நல்லதே.  'கடவுளே எல்லாவற்றையும் உருவாக்கினார் ' என்ற கருத்தைக் கொண்டிருப்பவர்களின் மீது அடி விழுவது எனக்கு மகிழ்ச்சியே. இவர்களைப் பார்க்கில், போப்பின் இரட்டை வேடம் எவ்வளவோ தேவலாம் என்பது என் கருத்து என்பதும் உண்மையே